தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபுடைமை செயலாக்கத் திட்டம் (ஹெரிட்டேஜ் அக்டிவேஷன் நோட்) இயக்கத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது நடவடிக்கை இம்மாதம் 20ஆம் தேதியன்று காத்தோங்-ஜூ சியாட் வட்டாரத்தில் தொடங்கப்படவுள்ளது.
சிங்கப்பூர் குடியிருப்பு வட்டாரங்களின் மரபைக் கொண்டாடுவதற்கான திட்டங்களை உருவாக்கி அவற்றில் பங்கேற்க சமூகத்துக்கு வாய்ப்பளிப்பது மரபுடைமை செயலாக்கத் திட்டத்தின் இலக்காகும்.
அந்த வகையில் காத்தோங்-ஜூ சியாட் வட்டாரத்தில் முதலாவது நடவடிக்கை இடம்பெறும். அதைத் தொடங்கிவைக்கும் வண்ணம் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள இரண்டு நாள் நிகழ்ச்சியில் 29 அங்கங்கள் இடம்பெறும். அந்நிகழ்ச்சியை 122 தொண்டூழியர்கள் நடத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பிற்பகுதியில் கிளமென்டியில் மேலும் ஒரு மரபுடைமை செயலாக்க நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்படும். 2025ல் அத்தகைய இரு நடவடிக்கைகளுக்கான இடங்களை அடையாளம் காணும் முயற்சியில் தேசிய மரபுடைமைக் கழகம் ஈடுபட்டுள்ளது.
ஒவ்வொரு நடவடிக்கையும் குடியிருப்பு வட்டாரங்களின் மரபைப் பல்வேறு அம்சங்களின் மூலம் எடுத்துக்காட்டும்.
காத்தோங்-ஜூ சியாட் வட்டாரத்துக்கான திட்டங்களை முன்வைக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வட்டாரத்துக்கான நடவடிக்கை தொடங்கப்படும்போது அழைப்பு விடுக்கப்படும்.
காட்சியகங்களை அமைப்பது, உரையாற்றுவது, ஓவியப் படைப்புகளைக் காட்சிக்கு வைப்பது போன்ற திட்டங்களை முன்வைக்கலாம். அவ்வாறு முன்வைக்கப்படும் ஒவ்வொரு திட்டத்தையும் தேசிய மரபுடைமைக் கழகம் ஆராயும்; அதனைத் தொடர்ந்து ஒவ்வொன்றுக்கும் 6,000 வெள்ளி வரையிலான நிதியுதவி வழங்கப்படலாம்.
சம்பந்தப்பட்ட குடியிருப்பு வட்டாரத்தின் மரபு, அது பற்றிய பரிச்சயம் இல்லாதோருக்கு எப்படி எடுத்துக்காட்டப்படுகிறது போன்ற அம்சங்களைக் கொண்டு நிதியுதவி வழங்குவதன் தொடர்பில் முடிவெடுக்கப்படும்.
மரபுடைமைச் செயலாக்கத் திட்டங்கள் மூலம் சிங்கப்பூர் முழுவதும் தங்களுக்கு இருக்கும் சமூகப் பங்காளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மரபு சார்ந்த நடவடிக்கைகளை ஏற்று நடத்த சமூகத்தினரை ஊக்குவிக்கவும் தேசிய மரபுடைமைக் கழகம் எண்ணம் கொண்டுள்ளதாக அதன் கொள்கை, சமூகப் பிரிவின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்வின் டான் தெரிவித்தார்.