போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
2019ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதை அடுத்து, கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு, போதைப்பொருளை உட்கொள்ளும் குற்றத்தை மட்டுமே புரிபவர்கள், போதைப்பொருளை உட்கொண்டு சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் என்ற இரு வெவ்வேறு பிரிவுகளாகப் போதைப்பித்தர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர்.
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட இளம் போதைப் பித்தர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 17 விழுக்காடு அதிகம் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட போதைப் பித்தர்களில் 27 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைந்தவர்கள்.
போதைப்பொருள் குற்றத்துக்காக மூன்று அல்லது அதற்கு அதிக முறை கைது செய்யப்பட்டோர் சாங்கி சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தின் ‘பி5’ பிரிவில் தடுத்து வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்காக மறுவாழ்வுத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்த ‘பி5’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் ஆக இளையவருக்கு 21 வயது. அங்குள்ள 958 கைதிகளில் 24 பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள்.
செலாராங் பார்க் வளாகத்தில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் உள்ள கைதிகளில் 84 பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள். அவர்களில் ஆறு பேர் 20 வயதுக்கும் குறைவானவர்கள்.
போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் உள்ள பெண் கைதிகள் ‘ஏ4’ பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 60 பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள். ஒன்பது பேர் 20 வயதுக்கும் குறைவானவர்கள்.
சமூக அடிப்படையிலான திட்டங்களில் விடுவிக்கப்பட்டவர்களையும் சேர்த்து 2023ஆம் ஆண்டில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் 3,981 கைதிகள் இருந்ததாக சிங்கப்பூர் சிறைத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.