ஊழல் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் 215 புகார்கள் அளிக்கப்பட்டதாக லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) தெரிவித்தது.
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8 விழுக்காடு குறைவு.
சிங்கப்பூரில் ஊழல் நிலவரம் கட்டுக்குள் இருப்பதாக அது கூறியது.
கிடைத்த 215 புகார்களில் 81 புகார்கள் விசாரணைக்காகப் பதிவு செய்யப்பட்டதாக சிபிஐபி அதன் வருடாந்தர அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை அது ஏப்ரல் 30ஆம் தேதியன்று வெளியிட்டது.
புகாரில் கூறப்பட்ட தகவல் நம்பகமானதாக இருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அது தெரிவித்தது.
2023ஆம் ஆண்டில் விசாரணை நடத்தப்பட்ட ஊழல் புகார்களில் பெரும்பாலானவை (86 விழுக்காடு) தனியார் துறையுடன் தொடர்புடையவை என்று தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய 14 விழுக்காட்டுப் புகார்கள் அரசுத் துறையுடன் தொடர்புடையவை.
தனியார் துறை தொடர்பாக மொத்தம் 70 புகார்கள் அளிக்கப்பட்டதாக சிபிஐபி கூறியது. அவற்றில் ஒன்பது, தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் தந்த லஞ்சத்தை ஏற்க மறுத்த அரசுத் துறை ஊழியர்கள் அளித்த புகார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
புகார்கள் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்டோரில் 84 விழுக்காட்டினரிடம் விசாரணை முடிவுற்றதாக சிபிஐபி கூறியது.
ஊழல் குற்றங்கள் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் 111 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 105 பேர் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் அரசுத் துறையைச் சேர்ந்தவர்கள்.