வரும் மாதங்களில் வர்த்தகச் சூழல் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று அதிகமான உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் சேவை நிறுவனங்களும் நம்பிக்கை கொண்டுள்ளதாக வெவ்வேறு கருத்தாய்வுகளில் தெரியவந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அம்சங்களின் வளர்ச்சி, பயணத் துறை மீட்சி ஆகியவற்றின் காரணமாக உற்பத்தி, சேவை நிறுவனங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக அந்தக் கருத்தாய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் துறையில் வர்த்தக நிலவரம் குறித்துப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் கருத்தாய்வு நடத்தியது. அதில் இவ்வாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான வர்த்தக நிலவரம் தங்களுக்குப் பாதகமாக இருக்கும் என்றெண்ணும் நிறுவனங்களைவிட, சாதகமாக இருக்கும் எனக் கருதும் நிறுவனங்களின் விகிதம் 22 விழுக்காடு அதிகமாகும். இந்த விகிதம், இதன் தொடர்பில் கழகம் நடத்திய முந்தைய கருத்தாய்வில் பதிவான 10 விழுக்காட்டைவிட இது மிகவும் அதிகமாகும்.
அதேவேளை, சிங்கப்பூர் புள்ளி விவரத் துறை, சேவைத் துறை நிலவரம் குறித்து நடத்திய மற்றொரு கருத்தாய்வில் இந்த விகிதம் ஏழு விழுக்காடாகப் பதிவானது. முந்தைய கருத்தாய்வில் பதிவான விகிதம் ஐந்து விழுக்காடாகும்.