மே மாதம் ஒன்றாம் தேதியன்று பிரதமர் லீ சியன் லூங் மே தினப் பேரணியில் உரையாற்றினார்.
இதுவே பிரதமராக அவர் ஆற்றிய கடைசி முக்கிய அரசியல் உரை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பேசி முடித்தவுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.
பிரதமர் லீக்குப் பரிசுகள், நினைவுப்பொருள்கள் வழங்கியதுடன் அவருடன் நின்று படமெடுத்துக்கொண்டனர்.
பிரதமர் லீ உரையாற்றியபோது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலமுறை எழுந்து கரவொலி எழுப்பினர்.
அவர்களில் சிலர், பிரதமர் லீ மீது தாங்கள் வைத்திருக்கும் மரியாதை, பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘ஐ லவ் யூ பிஎம் லீ’ என்ற வாசகத்தைக் காட்டும் இதய வடிவிலான பலூன்களை ஏந்திக்கொண்டு ஒலி எழுப்பான்களை ஊதினர்.
பலூன்களை ஏந்தி தங்கள் அன்பை வெளிப்படுத்தியவர்கள் உணவு, பானம் மற்றும் ஒப்பந்த முறை ஊழியர்களுக்கான சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
பிரதமர் லீக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்க விரும்பியதாக சங்கத்தின் தலைவர் ஜூலி சியோங் கூறினார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது அத்துறையைச் சேர்ந்த ஊழியர்களின் சம்பளத்தில் 75 விழுக்காடு வரை திரு லீ தலைமையிலான அரசாங்கம் வழங்கியதை அவர் நினைவுகூர்ந்தார்.
என்டியுசி விமானப் போக்குவரத்து, விண்வெளிக் குழுமத்தைச் சேரந்தவர்களும் வரிசையில் காத்திருந்து பிரதமர் லீக்குப் பரிசுப் பொருள் வழங்கினர்.
குழுமத்தின் தொழிற்சங்கத் தலைவர்கள் கையெழுத்திட்ட நினைவுக் கேடயம் ஒன்றை அவர்கள் பிரதமர் லீக்குத் தந்து மகிழ்ந்தனர்.
பிரதமர் லீக்குப் பரிசுப்பொருள்கள் தந்த பல தொழிற்சங்கங்களில் சிங்கப்பூர் கடற்துறை அதிகாரிகளுக்கான சங்கமும் ஒன்று.
சங்கத்தின் 65வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவுப் பதக்கங்கள் திரு லீக்குப் பரிசாகத் தரப்பட்டன என்று சங்கத்தின் தலைமைச் செயலாளரான 61 வயது திருவாட்டி மேரி லியூ கூறினார்.