சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கொல்லப்பட்ட லாரி விபத்து குறித்த விசாரணையில், “லாரி ஓட்டிக் கொண்டிருக்கும்போது ஜிபிஎஸ்-ஐ பார்த்தேன். அப்போது, கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால் இந்த விபத்து நிகழ்ந்தது” என்று லாரி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023, ஜூலை 7ஆம் தேதி விபத்து நடந்த இடத்தில் காவல்துறை அதிகாரியிடம், “லாரி ஓட்டும்போது நான் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால்தான் கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டது” என்று கூறியிருந்தார்.
அவர் ஓட்டிச் சென்ற லாரி, மூத்த சட்டப் பேராசிரியர் டான் யோக் லின் (70 வயது) ஓட்டிச் சென்ற கார் உட்பட, எதிரே வந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாவதற்கு முன், மூன்று வழிச்சாலையின் குறுக்கே சென்றது.
மே 2ஆம் தேதி மரண விசாரணை அதிகாரி நடத்திய விசாரணையில் நடராஜன் என்ற 26 வயது இந்திய நாட்டவர், விபத்துக்குப் பிறகு பதறிப்போன நிலையில் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகக் காவல்துறை அதிகாரியிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
“ஆனால் விபத்துக்குப் பிறகு உண்மையைச் சொல்லுமாறு என் குடும்பத்தார் எனக்கு அறிவுரை கூறினர். அதனால்தான் உண்மையைக் கூறுகிறேன்,” என்று சொன்னார்.
“அன்று நான் வாகனம் ஓட்டும்போது தூக்கக் கலக்கத்தில் இல்லை,” என்று மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூலம் அவர் கூறினார்.
அவர் ஜூலை 7ஆம் தேதி காவல்துறை அதிகாரிகளிடம் கூறியதை ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாற்றிச் சொன்னார்.
அப்பர் தாம்சன் ரோட்டில் இடதுபுறத் தடத்தில் தாம் சென்றுகொண்டிருந்தபோது ‘ஜிபிஎஸ்’ வலது பக்கம் திரும்ப வேண்டும் என்று காட்டியது என்று நடராஜன் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்தார்.
அவர் ஒரு சக ஊழியரை அழைத்துச் செல்வதற்காகப் பயனியர் வட்டாரத்தில உள்ள ஜாலான் புரோ பகுதியில் இருந்து அங் மோ கியோவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறினார்.
“ஜிபிஎஸ் வழிகாட்டுதலின்படி சாலையின் மூன்றாவது தடத்தில் இருந்து வலது பக்கம் வாகனத்தைச் செலுத்துவதற்காக முதல் தடத்திற்குச் செல்ல வாகனத்தின் கண்ணாடி வழியே அருகே வாகனங்கள் வருகின்றனவா என்று பார்த்தேன். அத்துடன் அந்தப் பகுதி எனக்கு அறிமுகமற்ற பகுதி. எனவேதான் அடிக்கடி ஜிபிஎஸ்-ஐ பார்க்க வேண்டியிருந்தது”.
வலது பக்கத் தடத்திற்கு லாரியை செலுத்தியதும் மீண்டும் தனது ஜிபிஎஸ் கருவியைப் பார்த்ததாகவும் அப்போதுதான் தனது லாரியின் முன்பக்கச் சக்கரம் சாலைத் தடுப்புக் கம்பியில் மோதியதை உணர்ந்ததாகக் கூறினார். அதைத் தொடர்ந்து அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். அந்த சமயத்தில் அவர் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் லாரியைச் செலுத்தியதாகக் கூறினார்.
கடந்த எட்டு மாதங்களாகவே தாம் வாகனம் ஓட்டுவதாகவும், கட்டுமான ஊழியர் என்பதால் பொதுவாக வாகனம் ஓட்டத் தேவையிருக்காது என்றும் கூறினார். சில நேரங்களில் வாகனம் ஓட்ட வேண்டியிருக்கும். சிங்கப்பூர் சாலைகள் நன்கு அறிமுகமில்லாததால் ஜிபிஎஸ் உதவியைச் சார்ந்திருப்பதாக நீதிமன்றத்தில் கூறினார்.
இந்த வழக்கு மீண்டும் மே 10ஆம் தேதி விசாரிக்கப்படும்.