உறவினர் ஒருவருக்கு நிறுவனத்தை ஏமாற்ற மலேசியரான கோ சென் நிங் துணைபோனார்.
அந்த நிறுவனத்தில் $145,000 பெறுமானமுள்ள 17 விலைக் குறிப்புகளை கோ பொய்யாகத் தயாரித்தார். இதற்காக அவர் $10,000 சன்மானமாகப் பெற்றார்.
இதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை (மே 3ஆம் தேதி) அன்று ஏமாற்றுக் குற்றச்சாட்டு ஒன்றை அவர் ஒப்புக்கொண்டார். அவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கோ மீது தண்டனை விதிப்பின்போது மேலும் ஒரு குற்றச்சாட்டு கருத்தில் கொள்ளப்பட்டது.
மலேசியரான கோ, வயது 34, பத்தாண்டுகளுக்கு முன்னால் சிங்கப்பூரில் தச்சராக வேலை பார்க்க வந்தார்.
கோவின் உறவினரான ஜேசன் என்று அழைக்கப்படும் டியோ சிவின் ஸென் என்பவர் தச்சு வேலை செய்யும் நிறுவனம் ஒன்றில் வாரயிறுதி நாள்களில் உதவுமாறு கோவைக் கேட்டுக்கொண்டார் என்று தற்காப்பு வழக்கறிஞர் அசோகா மார்கண்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கூடுதல் வருமானம் ஈட்டலாம் என நினைத்து கோ இந்த உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டார்.
பின்னர் கோ, டியோ இருவரும் சியாங் லாய் ஃபா என்பவருடன் சேர்ந்து காய் மில்ஒர்க் என்ற நிறுவனத்தை ஏமாற்ற திட்டம் தீட்டினர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.