முன்னாள் வழக்கறிஞர் ஒருவர் குறைந்த அறிவுத்திறன் உள்ள வாடிக்கையாளர் ஒருவரின் $527,000க்கும் மேற்பட்ட பணத்தை கையாடினார்.
அவருக்கு வெள்ளிக்கிழமை (மே 3ஆம் தேதி) அன்று நாலாண்டு, நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் $5,000 அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சொராயா ஹஃப்சா இப்ராகிம் என்ற அந்த 58 வயது முன்னாள் வழக்கறிஞர் கையாடிய பணத்தை தனது சொந்த செலவுக்காகவும் கடன்களை அடைப்பதற்கும் பயன்படுத்தினார்.
அவர் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அத்துடன், அவர் வழக்கறிஞராக செயல்படுவதற்கு 2020ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட பின்னரும் வழக்கறிஞராக செயல்பட்டு சட்ட ரீதியான ஆவணங்களைத் தயாரித்து அதற்காகப் பணம் பெற்றுக்கொண்ட ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் திருவாட்டி சொராயா பணத்தாசையில் இந்தக் குற்றங்களைப் புரியவில்லை என்று கூறப்பட்டது. மாறாக, கிட்டத்தட்ட $600,000 கடன் சுமையில் இருந்த தமது மகனுக்கு உதவவே இவ்வாறு நடந்துகொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி சொராயாவுக்கு தண்டனை விதிக்குமுன் அவர் தான் கையாடிய பணம் முழுவதையும் திருப்பியளித்துவிட்டதை நீதிபதி ஏற்று அதைக் குறித்துக்கொண்டார்.
எனினும், வழக்கறிஞர்கள் நம்பிக்கை மோசடி தொடர்பான குற்றங்களில் அந்தச் செயல்களின் கடுமையை கருத்தில்கொண்டு இதுபோல் இனி நடந்துகொள்ளாமல் இருப்பதைக் கருத்தில்கொண்டடே தண்டனை விதிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை நீதிபதி ஜில் டான் விளக்கினார்.
இதில் மோசடிக்கு ஆளான கட்சிக்காரர் குறைந்த அறிவுத்திறன் உடையவர் என்பதும் இதை முன்னாள் வழக்கறிஞரான திருவாட்டி சொராயா அறிந்திருந்தார் என்பதையும் தாம் கவனத்தில கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.