சிங்கப்பூர், 2026ஆம் அண்டுக்குள் அதிக மூப்படைந்த சமூகமாக மாறவுள்ளது.
ஒரு நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 21 விழுக்காட்டினர் 65 வயதைத் தொட்டுவிட்டால் அது அதிக மூப்படைந்த சமூகமாக வகைப்படுத்தப்படும்.
எனினும், சிங்கப்பூரின் சில பகுதிகள் ஏற்கெனவே அந்த நிலையைத் தொட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வசிப்போரில் 21 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் 65 வயதானவர்கள் அல்லது அதையும் தாண்டியவர்கள்.
சிங்கப்பூரில் 85 வயது அல்லது அதையும் தாண்டியோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துவருகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வயதுப் பிரிவில் இருந்தோரின் எண்ணிக்கை 36,000ஆக இருந்தது. இன்று அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 விழுக்காடு கூடி 64,000ஆக உள்ளது.
மூத்தோருக்குப் பலதரப்பட்ட தேவைகள் இருக்கின்றன; நோய்வாய்ப்பட்டோரைப் பராமரிப்பதில் மட்டும் தமது அமைச்சு கவனம் செலுத்தவில்லை என்றும் நோய்வாய்ப்பட்ட மூத்தோர் குணமடையக் கைகொடுத்து அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குக் திரும்ப நீட்டுவதிலும் கவனம் செலுத்துகிறது என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
“தொடர்ந்து துடிப்புடன் நலமாக, ஆரோக்கியமாக இருந்து சுயமரியாதையுடன் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவும் அவர்களுக்கு நாம் உதவவேண்டும்,” என்றார் திரு ஓங். பராமரிப்பின் பல்வேறு அம்சங்களுக்கு உட்படுத்தப்படும் மூத்தோர், ஒரு சமூகப் பராமரிப்பு அமைப்பிலிருந்து மற்றொன்றுக்கு மாறும் முறை மேலும் சீராக இருக்கலாம் என்றும் திரு ஓங் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமையன்று (மே 3) ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (ஏஐசி) சமூகப் பராமரிப்புச் செயல்பாட்டுத் திட்டம் தொடர்பான மாநாட்டில் அமைச்சர் ஓங் பேசினார். நிறுவனங்களில் காணப்படும் பதவி அடிப்படையில் அமையும் கட்டமைப்பு சமூகப் பராமரிப்புத் துறை போன்றவற்றுக்குப் பொருந்தாது என்பதையும் அவர் சுட்டினார்.
ஒரு பராமரிப்பு அமைப்பிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றப்படும் மூத்தவர் ஒருவர் ஒரே வகையான பரிசோதனைகளைப் பலமுறை மேற்கொள்ளவேண்டியிருக்கலாம் என்று திரு ஓங் விவரித்தார். பல்வேறு தேவைகள் இருக்கும் மூத்தோரைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட தகவல்களை ஒன்றுசேர்ப்பது சவாலாக இருக்கும் என்றும் அவர் சுட்டினார். தகவல்களைப் பகிர்ந்துகொள்ளப் போதுமான தளங்கள் இல்லாதது அதற்குக் காரணம்.
“உதாரணமாக சம்பந்தப்பட்ட மூத்தவரின் உடல்நலனில் மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதைப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் அமைப்பு ஒன்று கவனித்திருக்கலாம். ஆனால் அந்த மூத்தவருக்கான தகவல்கள் சம்பந்தப்பட்ட பராமரிப்பு அமைப்புக்கு அனுப்பப்படாவிட்டால் அவருக்கான பராமரிப்புச் சேவைகளை சீரான முறையில் தக்கவேளைகளில் வழங்கமுடியாது. நாம் தவறு இழைக்க வாய்ப்புள்ளது,” என்று திரு ஓங் சொன்னார்.
“பராமரிப்புச் சேவைகளை வழங்கும் ஓர் அமைப்பு மற்றொன்றைப் பின்னுக்குத் தள்ளுவது இத்துறையின் ஆணிவேரில் கிடையாது. ஒன்றுபட்டு நல்லது செய்வதுதான் நோக்கம்,” என்றார் அவர்.
அந்த வகையில், ஒரே பரிசோதனைகளைப் பலமுறை மேற்கொள்வதைக் குறைக்க அல்லது முற்றிலும் அகற்ற ஏஐசி அதன் கட்டமைப்பை மறுசீரமைத்துள்ளது. அதன்படி மூத்தோர் ஒவ்வொருவருக்குமான பொதுப்படையான பராமரிப்புத் திட்டம் வரையப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.