தாம்சன், கிழக்கு ரயில் நான்காம் கட்ட தடத்திலுள்ள நிலையங்கள் அனைத்திலும் புதிய இருவித குளிர்காற்று வசதியுடன் பாதாள சைக்கிள் நிறுத்துமிடமும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்சன், கிழக்கு ரயில் நான்காம் கட்ட தடத்தில், தஞ்சோங் ரூ நிலையத்திலிருந்து பேஷோர் நிலையம் வரை ஏழு நிலையங்களின் தளமேடைகளில் இந்த இருவித குளிர்காற்று வசதி ஏற்படுத்தப்படும். இவை குளிரூட்டிகளுடன் சேர்ந்து மேம்பட்ட காற்றோட்ட நிலையை உருவாக்குவதுடன் குளிரூட்டிகளின் குளிர்நிலையைக் குறைக்க வேண்டிய தேவையையும் குறைக்கும். முதல் முறையாக அறிமுகம் காணும் இந்த வசதி குறித்து வியாழக்கிழமை (மே 2ஆம் தேதி) அன்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இதேபோல் முதல் முறையாக அறிமுகம் காணும் மற்றொரு திட்டமாக, மரின் டெரஸ், மரின் பரேட், பேஷோர் ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் பாதாள சைக்கிள் நிறத்துமிடம் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் சைக்கிளோட்டிகள் தங்கள் சைக்கிள்களை ஓர் ஓரமாக வைத்திருக்கலாம்.
தாம்சன், கிழக்கு ரயில் சேவை ஜூன் மாதம் 23ஆம் தேதி பொதுமக்கள் சேவைக்கு திறந்துவிடப்படும்.
இதில் பெரும்பாலான ரயில் நிலைய தளமேடைகளில் இரு பெரிய செங்குத்தான மின்விசிறிகள் இருக்கும். எனினும், காத்தோங் பார்க் நிலையத்தில் தலைக்கு மேலே உள்ள மின்விசிறிகள் சுற்றும்.
தாம்சன், கிழக்கு நான்காம் கட்ட ரயில் தடத்தில் எத்தனை இருவித குளிர்காற்று மின்விசிறிகள் அமைக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த நிலப் போக்குவரத்து ஆணையப் பேச்சாளர் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.