கே கே மகளிர், சிறார் மருத்துவமனையில் தவறான நிர்வாகத்தால் மாது ஒருவருக்குக் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை கலைந்ததாகப் பொய்யான தகவல்களை இணையத்தில் பதிவு செய்த வழக்கில் தொடர்புடைய மாதுமீது அவதூறு குற்றச்சாட்டுத் திங்கட்கிழமை (மே 6) சுமத்தப்படும்.
குழந்தை பெரும்பாலும் இறந்துள்ளது - கே கே மகளிர், சிறார் மருத்துவமனையில் மாது தனக்கு ஏற்பட்ட மனவேதனையை நினைவுகூறுகிறார் என்ற தலைப்பில் ‘வேக் அப்’ இணையத்தளத்தில் தவறான தகவல்கள் கொண்ட பதிவு ஒன்று வெளியிடப்பட்டது.
இதன் தொடர்பில், புகார் ஒன்றை 2022ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையிடம் அளித்ததாகக் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (மே 5) அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.
அந்தப் பதிவில் கே கே மகளிர், சிறார் மருத்துவமனையின் தவறான நிர்வாகத்தால் மாது ஒருவருக்குக் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை கலைந்ததாக ‘வேக் அப் சிங்கப்பூர்’ இணையத்தள நிர்வாகியான 26 வயது அரிஃபின் இஸ்கந்தர் ஷா அலி அக்பர் பதிவு செய்திருந்தார். இந்தத் தகவலை அவர் வேக் அப் இணையத்தளம், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகியவற்றிலும் பதிவு செய்திருந்தார்.
இந்தத் தகவல்களை அரிஃபினுக்கு 27 வயது மாது ஒருவர் ‘வேக் அப் சிங்கப்பூர்’ இணையத்தளத்தின் இன்ஸ்டகிராம் முகவரிக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.
அதில், கே கே மகளிர், சிறார் மருத்துவமனையின் அலட்சியத்தால் தனக்கு ஏற்பட்ட மனவேதனை குறித்து அந்த மாது விவரித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் இந்தச் சம்பவமும் மருத்துவமனை மீது கூறப்படும் புகார்களும் தவறு என்று தெரியவந்தது.
அரிஃபின் மீது ஏப்ரல் 24ஆம் தேதி அவதூறு குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டது.
அவதூறு குற்றம் நிரூபிக்கப்பட்டால்,குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.