சிங்கப்பூரில் ‘லிம்போமா’ எனப்படும் நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குறைந்தது மூவரில் ஒருவர் ஐந்தாண்டுகளுக்குள் உயிரிழக்கின்றனர் எனச் சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலைய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், அவர்கள் நோயை விரைவில் கண்டறிந்து அதற்குச் சிகிச்சை எடுத்து கொண்டாலும் நோய்நிலை மீண்டும் மோசமடைகிறது என ஆய்வு தெரிவித்தது.
2010ஆம் ஆண்டிற்கும் 2022ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் ‘லிம்போமா’ பாதிப்பு கண்டறியப்பட்ட 1,071 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வகைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 74.7 விழுக்காட்டினர் ஐந்தாண்டுகளுக்குமேல் உயிர் வாழ்ந்தனர் என்றும், 64.5 விழுக்காட்டினர் ஆய்வு நேரத்தில் மீண்டும் மோசமடைந்த நோய்நிலைக்குச் சிகிச்சை பெற்று வந்தனர் என்றும், அவர்கள் விரைவில் குணமடைவர் எனக் கருதப்பட்டனர் என்றும் ஆய்வு கூறியது.
இந்நோயைக் குணப்படுத்த, ஐந்து மருந்துகளை உள்ளடக்கிய ‘ஆர்-சாப் கீமோதெரபி’ சிகிச்சை முறை அல்லது ‘கீமோதெரபி’ சிகிச்சைக்கு ஒத்த விதிமுறைகள் கொண்ட வேறு சிகிச்சைகள் போதுமானதாக இல்லை என்பதை இது நிரூபிப்பதாக உள்ளது என ஆய்வு தெரிவித்தது.
இதன்மூலம், சிங்கப்பூரில் இன்னும் இதுபோன்ற நோய்களுக்கு மேம்பட்ட சிகிச்சை தேவை என்பது இந்த ஆய்வு முடிவு காட்டுவதாக சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் நிலையத்தின் உதவிப் பேராசிரியர் ஜேசன் சான் கூறினார்.
அமெரிக்க உணவு, மருந்து அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறைகளைச் சுட்டிக்காட்டி, இதுபோன்ற பயனுள்ள மேம்பட்ட சிகிச்சை முறைகள் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன என்றார் சான்.
ஏப்ரல் மாத நிலவரப்படி, சிங்கப்பூரில் மேலும் மோசமடையும் ‘லிம்போமா’ நோய் நிலைக்குச் சிகிச்சை அளிக்க இரண்டு கார்-டி சிகிச்சைகளும் ஒரு ‘பைட்’ சிகிச்சையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட மற்றும் மானியங்கள் மூலம் கிடைக்கும் செலவு குறைந்த புற்றுநோய் சிகிச்சைப் பட்டியலில் இல்லை. அதனால், மெடிஷீல்டு மற்றும் ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டங்கள் மூலம் இந்தச் சிசிச்சையைப் பெறமுடியாது.
எதிர்காலத்தில் இதுபோன்ற மேலும் பல சிகிச்சை முறைகளை எதிர்பார்க்கிறேன் என்றார் திரு சான்.