தெம்பனிஸ் மால் கடைத்தொகுதியின் நான்காவது மாடியில், புதன்கிழமை (டிசம்பர் 27) இரவு ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து, தங்களுக்கு இரவு 9.20 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது. மேலும், 4வது தளத்தில் இருந்த மின்னிணைப்புகளாலும் மின்கம்பிகளாலும் இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியது.
எஸ்சிடிஎஃப் வருவதற்கு முன்பு அங்கிருந்த இரண்டு பேர், தீயணைப்பான்களை வைத்து தீயை அணைத்தனர் என்று கூறப்பட்டது. தீயினால் கடைத்தொகுதியிலிருந்து வெளியேறிய பொதுமக்களும் கடைக்காரர்களும் 9.50 மணியளவில் திரும்பி வந்தனர்.
இவ்விபத்தால் யாரும் காயமடையவில்லை என எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.