ராஃபிள்ஸ் பிளேஸ், குறிப்பாக தெலுக் ஆயர், அமோய் ஸ்திரீட்டில் உள்ள கடைவீடுகள் சிங்கப்பூரிலேயே ஆக வெப்பமான இடங்களில் சில.
கட்டடங்கள் சூழ்ந்த பகுதிகளால் எவ்வாறு வெப்பத்தைத் தக்கவைக்க முடியும் என்ற ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
ஆகக் குளிர்ந்த பகுதியாக அப்பர் பியர்ஸ் நீர்த்தேக்கப் பூங்கா அடையாளம் காணப்பட்டுள்ளது. 33.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ராஃபிள்ஸ் பிளேஸ் பதிவுசெய்தது. அப்பர் பியர்ஸ் நீர்த்தேக்கப் பூங்காவைவிட அங்கு வெப்பநிலை 6.5 டிகிரி செல்சியஸ் அதிகம்.
உலகளாவிய நீடித்த வளர்ச்சி ஆலோசனை நிறுவனமான ‘அருப்’ நடத்திய ‘அர்பன் ஹீட் ஸ்னேப்ஷாட்’ எனும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட வெப்பநிலை, 2022ன் ஆக வெப்பமான தினமான மே 13ஆம் தேதி நள்ளிரவில் பதிவானது.
அந்த ஆய்வு சிங்கப்பூர் முழுவதையும் ஆராய்ந்தது.
நகர்ப்புறப் பகுதிகளில் பகல் நேரத்தில் கட்டடங்கள், நடைபாதைகள், நீர்புகாத மேற்பரப்புப் பகுதிகள் ஆகியன சூரிய ஒளியை ஈர்த்து தக்கவைத்துக்கொள்கின்றன.
இரவில் தரைமட்டத்தில் வெப்பம் நிலவுகிறது. ஏனெனில், கட்டடங்கள் சூழ்ந்த பகுதி வெப்பம் வானை நோக்கிச் செல்வதைத் தடுக்கிறது. இதனால், அப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது.
அப்பர் பியர்ஸ் நீர்த்தேக்கப் பூங்காவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் வெப்பத்தை ஈர்ப்பவை என ஆய்வு சுட்டியது. ஏனெனில், அப்பூங்காவில் 88 விழுக்காடு நீராகவும் 12 விழுக்காடு தாவரங்களாகவும் உள்ளன.
ஒப்புநோக்க, தெலுக் ஆயர், அமோய் ஸ்திரீட்டில் உள்ள கடைவீடுகளுக்கு மேலே இருண்ட சுடுமண் கூரைகளை சூரிய ஒளி வெப்பமாக்குகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.