இந்திய மரபுடைமை நிலையமும் ஆனந்தா மரபுக்கலைகள் கூடமும் (ஆட்டம்) இணைந்து வழங்கும் ‘நம் மரபு’ தொடரின் ஓர் அங்கமாக, கரகாட்ட கலையையும் தவில் கலையையும் சிங்கப்பூரர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவிலிருந்து கலைமாமணி தேன்மொழியும் கலைச்சுடர்மணி ராஜேந்திரனும் இங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
மே 8ஆம் தேதி நடந்த உரையாடல் அமர்வில் இந்தத் தொடர் குறித்த கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டதோடு இரண்டு கலைஞர்களைக் கொண்டு பட்டறை ஒன்றும் நடத்தப்பட்டது. இதற்குமுன் கோலாட்டத்தையும் ஒயிலாட்டத்தையும் கற்றுக்கொடுக்கும் பயிலரங்குகளை கலைமாமணி இளங்கோவன் நடத்தினார்.
இந்தத் தொடர் ‘நமது மரபுக் கலைகள், நமது சொத்து’ என்ற கருப்பொருளையொட்டி அமைக்கப்பட்டது. மரபுக் கலைகளை சிங்கப்பூரில் உள்ள கலைஞர்களுக்கு முறையாகக் கொண்டுபோய் சேர்ப்பது நோக்கம் என்று விழா மேலாளர், சுப்பு அடைக்கலவன், 29, சொன்னார். அவர்கள் அதைக் கற்றுக்கொண்டு மேலும் பலருக்குச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
பரதநாட்டியக் கலைஞரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீதேவி, சிங்கப்பூரில் பிரபலமான நடன வகைகளான பரதநாட்டியம், கத்தக் போன்றவற்றோடு, தமிழ்ப் பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள் மீதும் கலைஞர்களுக்கு ஆர்வம் வளர வேண்டும் என்று கூறினார். மேலும், துடிப்பான முதுமை ஊக்குவிக்கப்படும் இன்றைய சூழலில் எல்லா வயதினரும் மரபுக் கலைகளில் ஈடுபட்டு மகிழலாம் என்றார் அவர்.
அன்றைய நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த கலைமாமணி தேன்மொழியும் கலைச்சுடர்மணி ராஜேந்திரனும் தங்கள் இருவரின் கலைகளைப் பற்றி விரிவாக விளக்கினார்கள். தம்பதியரான அவர்கள் 42 ஆண்டுகள் அனுபவத்தோடு, 5,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இதுவரை படைத்துள்ளனர்.
“மண்ணின் பாரம்பரிய கலையான கரகாட்டக் கலையைப் போற்ற வேண்டும், மதிக்க வேண்டும், வாழ்த்த வேண்டும், விட்டுவிடாமல் காக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார் கலைச்சுடர்மணி ராஜேந்திரன். வெளிநாட்டில் உள்ள தமிழ் மக்கள் இந்தக் கலையைத் தொடர்ந்து பெருமைப்படுத்த முடியும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார் அவர்.
இதைத் தொடர்ந்து நடந்த பட்டறையில், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கலைச்சுடர்மணி ராஜேந்திரனின் தவில் இசையைப் பக்கவாத்தியமாகக் கொண்டு கரகாட்டத்தைக் கலைமாமணி தேன்மொழியிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வரும் நாள்களில் சிங்கப்பூரைச் சுற்றி மேலும் பல பயிலரங்குகளை இருவரும் நடத்தவுள்ளனர்.
மே 11ஆம் தேதி, சனிக்கிழமை அன்று இந்திய மரபுடைமை நிலையத்தில் இரண்டு கலைஞர்களும் இணைந்து இலவசப் பட்டறை ஒன்றைப் பொதுமக்களுக்கு நடத்துகிறார்கள். பட்டறையில் கலந்துகொள்ள விரும்புவோர் https://karagamworkshop.peatix.com/view என்ற இணையத்தளத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம்.
எதிர்வரும் நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பற்றியும் உரையாடல் அமர்வில் ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். ஜூலை 13ஆம் தேதி, இந்திய மரபுடைமை நிலையம், ஆட்டம், சிண்டா, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், நற்பணி ஆகியவை இணைந்து நடத்தவிருக்கும் நிகழ்ச்சியான இந்திய மரபுடைமை கலை விழா 2024ல், பல்வேறு இனங்களைச் சேர்ந்த 1,000 முதல் 1,200 பேர்வரை தமிழ் நாட்டுப்புற நடனத்தை ஆடக் கற்றுக்கொள்வார்கள்.
இதைத் தொடர்ந்து, ஆனந்தா கொண்டாட்டம் 2024 எஸ்பிளனேடில் ஆகஸ்ட் 30, 31ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து முக்கியக் கலைஞர்கள் சிங்கப்பூருக்கு அழைத்துவரப்பட்டு பல நிகழ்ச்சிகளைப் படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேல் விவரங்களுக்கு https://www.anandha.art/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.