வாகனமோட்டிகளும் நிறுவனத்தாரும் 2023ஆம் நிதியாண்டில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்களுக்கும் வாகன வரிகளுக்குமாக மொத்தம் $7.26 பில்லியன் செலுத்தினர்.
இது அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 22.4 விழுக்காடு அதிகம்.
குறைந்தது ஆறு ஆண்டுகளில் இதுவே ஆகப் பெரிய கூட்டுத் தொகை என்று வரவுசெலவுத் திட்டம் 2024க்கு நிதி அமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்கள் காட்டின.
வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணங்களில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பும், சொகுசுக் கார்களுக்கான வரிகளும் இந்த அதிகரிப்புக்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
2024 நிதியாண்டுக்கு, வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணங்களில் இருந்தும் வாகன வரிகளிலிருந்தும் கிடைக்கும் கூட்டு வருவாய் 4.1 விழுக்காடு உயர்ந்து, $7.56 பில்லியனாக இருக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணங்கள் 2022ல் கிட்டத்தட்ட தொடர்ச்சியாக ஏறிக்கொண்டிருந்தன.
அப்போது சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் $106,000ஆக இருந்தது. 2023ஆம் ஆண்டு அக்டோபரில், பெரிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் $150,001ஆக இருந்தது.
இந்தக் கட்டணங்கள், 2021ஆம் ஆண்டில் இருந்த கட்டணங்களைவிட ஒரு மடங்குக்கும் அதிகமாக இருந்தன.
சென்ற ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் கூடுதல் பதிவுக் கட்டணம், அல்லது முதன்மை கார் வரி, விலையுயர்ந்த கார்களுக்குத் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டாக உயர்த்தப்பட்டது.
அதே நேரத்தில், முன்னுரிமை கூடுதல் பதிவுக் கட்டணங்களின் உச்ச வரம்பு $60,000ஆக இருந்தது.