தன்னைத் தெய்வம் என்று கூறிக்கொண்டு தன்னுடைய ஆதரவாளர்களிடமிருந்து $7 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வசூலித்ததாக 53 வயது வூ மே ஹோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்தத் தொகையுடன் வெவ்வேறு நிதி நிலையங்களிலிருந்து மேலும் $6.6 மில்லியனைக் கடனாகப் பெறவேண்டும் என்றும் இவர் தன் ஆதரவாளர்களைக் கோரியிருந்தார்.
தனக்கு அதிருப்தி தருவோரைக் கடுமையாகத் தண்டிக்கும் வகையில் மனித மலத்தைச் சாப்பிடவும் வைத்துள்ளார்.
இந்நிலையில், மே 8ஆம் தேதி தாக்குதல் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளையும் மோசடி தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளையும் சிங்கப்பூரரான வூ ஒப்புக்கொண்டார்.
ஸ்ரீ சக்தி நாராயணி அம்மா என்ற ஆன்மிகத் தலைவரை வழிபடும் கூட்டத்துக்கு இவர் தலைவராக இருந்ததாகவும் அந்தக் குழுவில் சுமார் 30 பேர் இருந்ததாகவும் அறியப்படுகிறது.
திரட்டப்படும் தொகை, இந்தியாவிலுள்ள ஸ்ரீ சக்தி நாராயணி அம்மாவின் அமைப்பைச் சென்றடையும் என்று வூ தன் ஆதரவாளர்களிடம் கூறியிருந்தார். ஆனால், 2012 முதல் 2020 வரை அந்தப் பணத்தை அவரே அபகரித்துக்கொண்டார்.
ஆதரவாளர்கள் சிலர் வூமீது புகார் அளித்ததை அடுத்து 2020ஆம் ஆண்டில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
கத்தரிக்கோலால் தாக்குதல், தடி கொண்டு அடித்தல், ‘பிளையர்’ கொண்டு பற்களைப் பிடுங்குதல், உயரத்திலிருந்து குதித்தல் எனப் பலதரப்பட்ட தண்டனைகளை வூ விதித்திருந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கிரேஸ் சுவா கூறினார்.
வீடுகள், கார்கள் போன்றவற்றை வாங்கி ஒருவித வழிபாடாகத் தனக்குச் செலுத்துமாறு தன் ஆதரவாளர்களுக்கு வூ உத்தரவிட்டார். அவற்றை வூ தனது பயன்பாட்டுக்கே வைத்துக்கொண்டார்.
தன் ஆதரவாளர்களின் சேமிப்பு தீர்ந்துவிட்ட நிலையில் நகைகள், உடைமைகள் ஆகியவற்றையும் வூ அடகு வைக்க உத்தரவிட்டிருந்தார்.
தான் சொல்வதற்கு அடிபணியாவிட்டால் ஆதரவாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் மரணம் நேரும் என்று குற்றம் சாட்டப்பட்ட வூ மிரட்டியும் இருந்தார்.
ஒருசில ஆதரவாளர்கள் தன்னுடன் ஒரே வீட்டில் வசிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்த வூ, எந்நேரமும் தனக்குச் சேவை செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையும் இட்டிருந்தார்.
இதையடுத்து, ஜூன் மாதம் வூக்குத் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தண்டனை விதிப்பின்போது மேலும் 45 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும்.