தோற்றப் பொலிவுக்கு, வெளிர்நிறம், உடலின் முடியை நீக்குவது போன்றவை முக்கியம் என்ற கருத்தைத் திரைப்படங்கள், விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் எனப் பல்வேறு தளங்கள் காட்டுகின்றன. குறிப்பாக உடலில் அதிகமான முடி தோற்ற அழகை கெடுக்கிறது என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. இதனால் உடல் முடியை நீக்கும் அழகுப் பராமரிப்புச் சேவைகள் அத்தியாவசிய தேவையாகிவிட்டன. இது குறித்து தமிழ் முரசு ஆராய்ந்து வந்தது.
மஞ்சள் பூசியது முதல் இன்றைய அழகு சிகிச்சை வரை முகத்திலும் உடலிலும் உள்ள முடியை அகற்றுவது காலந்தோறும் பெண்களின் அழகுப் பராமரிப்பில் முக்கிய அங்கமாக இருந்துவந்துள்ளது. இன்று ஆண்களும் இத்தகைய சேவையை நாடி வருகின்றனர்.
முடி நீக்கும் சேவையை ஆண்கள் பயன்படுத்தத் தயங்கத் தேவையில்லை என்று பொறியாளராகப் பணிபுரியும் 28 வயது ஹரி ராகுல் கூறுகிறார். தாடி மீசை மழித்துவரும் இவர், முடி அகற்றுவதற்கான புதிய சேவைகளைப் பற்றி தெரிந்துகொண்டு பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பெண்கள் பெரும்பாலும் முட்டி வரை ஆடைகளையும் மொட்டைக் கை சட்டைகளையும் அணிய கால்களில் வளரும் முடியில் தொடங்கி, தற்போது கைகள், முகம், அக்குள் போன்ற பிற இடங்களிலும் முடி வளர்வதைத் தடுக்க விரும்புகின்றனர்.
அதே நேரம் புகழ்பெற்ற பாலிவுட் நடிகை கரீனா கபூர் அண்மைய நேர்காணலில், உடலில் வளரும் முடிக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை என்றார்.
புருவத்தில் உதட்டுக்கு மேல் முடி வளர்ந்தால் அதைப் பொருட்படுத்துவதில்லை என்ற கரீனா. அது இயற்கை என்று கூறினார். உடலில் இருக்கும் முடி பார்க்க சகிக்காதது என்ற எண்ணத்தை உடைக்கும் முயற்சியாக இந்திய நடிகை திலோத்தமா ஷோமே இரு கைகளையும் மேலே தூக்கியபடி அக்குளில் வளர்ந்துள்ள முடியைக் காண்பிக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்தார்.
ஆனால் அதே சமூக ஊடகங்களில் பிரபலங்கள் தோல் வெளுப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றும்போது அதுவே சுண்டி இழுக்கும் அழகு என்ற எண்ணம் மீண்டும் பதிய வைக்கப்படுகிறது.
முடி நீக்க பல்வேறு வழிகள்
மழிப்பதைத் தவிர்த்து கை கால் முகத்தில் உள்ள முடியை நீக்க இப்பொழுது பல வழிகள் வந்துள்ளன.
மெழுகை மூலப்பொருளாகக் கொண்ட பசையில் தேன் உள்ளிட்ட இயற்கை மூலப்பொருளைக் கலந்து, உடலில் இருக்கும் முடியை அகற்ற ‘வேக்சிங்’ முறை பயன்படுத்தப்படுகிறது. ‘வேக்சிங்’ செய்தால் மாதம் ஒருமுறை மட்டும் முடி அகற்றினால் போதும் என்பதால் மழிப்பதற்குப் பதில் பலர் இதை நாடுகிறார்கள்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அழகுப் பராமரிப்புத் துறையில் உள்ள ‘லேடி ஃபேர்’ அழகு நிலையத்தின் நிறுவரான பாமா சுதர்மன், முடி அகற்றும் வழிகளில் ‘வேக்சிங்’ சிறந்தது என்றார். தம்முடைய பெண் வாடிக்கையாளர்கள் முன்னதாக தங்கள் வசதிக்கு ஏற்ப உடல் முடியை மழித்ததால் அவர்களின் முடி மிக தடினமாக வளர்ந்தது என்று பாமா குறிப்பிட்டார்.
மேலும், ‘வேக்சிங்’ செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பசை, இயற்கை மூலப்பொருள்களால் தயாரிக்கப்படுவதால் அது சருமத்திற்கு எவ்விதப் பக்கவிளைவும் ஏற்படுத்தாது என்றார் பாமா.
‘வேக்சிங்’ செய்வதால் முடி வளர்வது மெதுவடையும் என்றார் ‘நைஸ்’ அழகு, முடி பராமரிப்பு நிலையத்தின் நிறுவனர் திரு கார்த்திக். ஒவ்வோர் உடல் அங்கத்திற்கும் வெவ்வேறு பசைகள் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது ‘ஷுகரிங்’ எனும் சேவையும் உள்ளதென்று கூறிய கார்த்திக், இதற்கு பயன்படுத்தப்படும் பசை, முழுக்க முழுக்க இயற்கை மூலப்பொருள்களால் செய்யப்பட்டது என்றார். முடியை அகற்றும் அதே வேளையில் ‘ஷுகரிங்’ மூலம் தோலில் தேவைப்படாத அணுக்கள் அகற்றப்பட்டு, சருமம் புதுப் பொலிவு பெறுவதாகக் கூறப்படுகிறது.
முடி சரியாக வளராமல் தோலுக்குள் சுருண்டுகொள்ளும் பிரச்சினை, இந்தியப் பெண்களிடையே அதிகம் காணப்படும் நிலையில் ‘ஷுகரிங்’ முறை இதற்கும் தீர்வு காணும் என்றார் கார்த்திக். இதையும் தாண்டி, அறவே முடி வளரக்கூடாது என்பதற்காக, பலர் ‘ஐபிஎல்’, ‘லேசர்’ முறைகளில் முடி அகற்றுவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
‘லேசர்’ முறையில் முடியை நீக்க முடிவு செய்துள்ள காஞ்சனா மனோகரன், 24, முடியை மழித்து வந்ததால் உடலில் மிருதுவற்ற முடி வளர்ந்ததாகவும் அது வலி உண்டாக்கியதாகவும் கூறினார். வலியின்றி தமது சருமத்தை மென்மையாக்கும் விதத்தில் லேசர் இருக்கலாம் என்பதால் அந்த முறையை அடுத்து நாட காஞ்சனா விரும்புகிறார்.
காஞ்சனாவைப் போலவே, 22 வயது சீனிவாசன் ஸாந்தினி ‘லேசர்’ செய்ய விரும்புகிறார். இதுவரை ‘வேக்சிங்’ செய்துள்ள இவர், வலி ஏற்படாமல் இருப்பதற்கும் முடி வளர்வதைக் குறைப்பதற்கும் ‘லேசர்’ செய்ய முடிவெடுத்துள்ளார்.
துன்பம் தந்த அனுபவம்
இதற்கிடையே ‘லேசர்’ முறையிலிருந்து சற்று வேறுபட்ட ‘ஐபிஎல்’ முடி அகற்றும் முறை தமக்குத் தந்த துன்பத்தை கிருஷ்ணவேணி பக்கிரிசாமி விவரித்தார்.
அழகு நிலையம் ஒன்றில் தள்ளுபடி வழங்கப்பட்டதால் கிருஷ்ணவேணி இந்த முறையைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று நினைத்தார். ஒரே ஒரு முறை செய்துபார்த்ததை அடுத்து தோலில் கருந்திட்டுகள், வீக்கம், தோல் உரிவது போன்ற பிரச்சினைகள் அவருக்கு ஏற்பட்டன.
‘எக்ஸீமா’ எனும் அரிக்கும் தோலழற்சி பிரச்சினை உள்ள இவருக்கு, இப்பக்கவிளைவுகள் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தின.
முடி வளர்ந்தாலும் பரவாயில்லை, ‘ஐபிஎல்’, ‘லேசர்’ போன்ற சேவைகள் இனி வேண்டாம் என முடிவெடுத்த இவர், பாதுகாப்பான முறையில் ரசாயனக் கலப்பில்லாத ‘ வேக்சிங்’ முறையைப் பயன்படுத்தி வருகிறார். அவருடைய தோல் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது.
20 ஆண்டு அனுபவம் உள்ள தோல் மருத்துவரும் ‘ரத்னம்’ஸ் அலர்ஜி அண்ட் ஸ்கின் கிளினிக்’ இயக்குனருமான டாக்டர் கே.வி. ரத்னம், எத்தகைய சருமத்தையும் அனுபவம் வாய்ந்த அழகுக்கலை நிபுணர் ஒருவர், ‘லேசர்’ முறை மூலம் பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் என்றார்.
லேசர் செய்ததும் சருமம் வீங்குவதும் சிவந்து போவதும் இயல்புதான் என்ற டாக்டர் ரத்னம், சில சமயங்களில் சரியான முறையில் செய்யாவிட்டால் சருமம் எரிந்துவிடுவதற்கு வாய்ப்புண்டு என்று குறிப்பிட்டார். அதனால் அழகுக்கலை நிபுணர் அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.
‘லேசர்’ போன்ற சேவை களுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் செலவு செய்யத் தயாராக இருக்க வேண்டும். இந்தக் கூடுதல் செலவால் எவ்விதப் பக்கவிளைவுகளும் இருக்கக் கூடாது என்ற எதிர்பார்ப்பும் சிலரிடையே நிலவுகிறது என்று டாக்டர் ரத்னம் கூறினார்.
புதிய தொழில்நுட்பங்கள்
ஐபிஎல், லேசர், திரெடிங், வேக்சிங் உள்ளிட்ட பழக்கப்பட்ட சேவைகளைத் தவிர புத்தம்புதிய முடி அகற்றும் முறைகளை அழகுப் பராமரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. இவை வேகமாகச் செயல்படுவதுடன் பாதுகாப்பாகவும் உள்ளதாக அவை கூறின.
அவற்றில் ஒன்றான ‘அலங்காரா எஸ்த்தெடிக்ஸ்’ அழகு நிலையத்தில் ‘சூப்பர் ஹேர் ரிமூவல்’, ‘பிளாட்டினம் ப்ரோ ஹேர் ரிமூவல்’ போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் இயக்குநர் ஷினி ராமாஷ், 29, ‘பிளாட்டினம் ப்ரோ’ சேவை போன்ற சேவைகளை ஆண் வாடிக்கையாளர்களும் நாடி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், ஒருவரின் சருமத்தையும் முடியையும்விட இத்தொழில்நுட்பம் முடியின் வேரை மட்டும் குறிவைத்து அகற்ற வல்லது.
தன்னம்பிக்கை தரும் பராமரிப்பு
அழகாகத் தோற்றமளிப்பதற்காக மட்டுமல்ல சில பெண்கள் முடியை நீக்குவதால் தன்னம்பிக்கை கூடுவதாகக் கூறினர்.
முடி அகற்றுவதை 27 வயது சௌந்தர்யா, ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார். முடிநீங்கி விதவிதமான உடைகளை அணிந்து வெளியே அல்லது வேலைக்குச் செல்லும்போது தன்னம்பிக்கை கூடுவதாகவும் மெருகேறிய உணர்வைப் பெறுவதாகவும் சொன்னார்.
இளமையில் தொடங்கிய மாதரும் ஐம்பதுகளிலும் தங்கள் தேவைக்கேற்ற முடி நீக்கும் சேவைகளை காலத்துக்கு ஏற்ப மாற்றி வருகின்றனர்.
நிதித் துறையில் பணிபுரியும் ரேகா தருமலிங்கம், 43, கடந்த 20 ஆண்டுகளாக கைகளிலும் கால்களிலும் இருக்கும் முடியை அகற்றி வருகிறார்.
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒரு முறை அழகு நிலையங்களுக்குச் செல்லும் இவர், உடலிலும் முகத்திலும் இருக்கும் முடி, தம்மை ஓர் ஆண் போல் காட்டுவதாகக் கருதினார்.
முடியைப் பிடுங்கும்போது தோல் நாளடைவில் தொங்கி விடும் என்ற இவர், ‘வேக்சிங்’ செய்துகொள்கிறார். ‘லேசர்’ சேவைக்குச் சென்ற தம் தோழியின் தோலில் வரிவரியாக வரத் தொடங்கியதால் பாதுகாப்பு காரணமாக ரேகா வேக்சிங் மட்டுமே செய்து வருகிறார்.
சுமார் 30 ஆண்டுகளாக தமது அழகைப் பாதுகாத்துக்கொள்ள 56 வயது சரஸ்வதி, முடி நீக்குவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார். அழகு நிலையங்களுக்குச் செல்லாமல் மாதம் ஒரு முறை தமது முடியைத் தாமே அகற்றிக் கொள்கிறார்.
முடியை அகற்றுவதால் உடல் சுத்தமாகத் தோன்றுவதாகக் கூறிய இவர், இதனால் அழகு கூடுவதாகவும் தம்மை பிறர் மதிப்பதாகக் கருதுவதாகவும் சொன்னார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இவர், புருவம் திருத்துவதுடன் அக்குளில் இருக்கும் முடியை அகற்றி வருகிறார்.