ஐபில் கிரிக்கெட் போட்டியில் ஐந்தாவது முறையாக கிண்ணத்தை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அந்த அணித்தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு இது கடைசி ஐபில் பருவம் என்று பரவலாகப் பேசப்பட்டது. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் சென்னை அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
சென்னை அணியும் இறுதியாட்டத்தில் குஜராத் அணியை கடைசிப் பந்தில் வீழ்த்தி, விளையாட்டு அரங்கத்தை அதிரவைத்தது.
ஆட்டத்திற்குப் பிறகு நடந்த பேட்டியில் டோனியிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
“வெற்றிக் கிண்ணத்துடன் ஓய்வை அறிவித்துவிடலாம். ஆனால், இந்தப் பருவம் முழுவதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு நெகிழ்ச்சி தருகிறது. அவர்களுக்காக இன்னொரு பருவம் விளையாட ஆசைதான், இருப்பினும், உடல் ஒத்துழைக்க வேண்டும். ஓய்வு குறித்து முடிவெடுக்க இன்னும் 9 மாதங்கள் இருக்கிறது,” என்று 41 வயது டோனி கூறினார்.
டோனி இப்பருவத்தில் அவ்வளவாக பந்தடிக்க வரவில்லை. மூட்டிலும் காயமடைந்ததால் அவரால் முன்னைப்போல் ஆடுகளத்தில் சீற முடியவில்லை. இருப்பினும், தமது திறமையான தலைமைத்துவத்தில் ஐந்தாவது முறையாக சென்னை அணிக்கு அவர் ஐபிஎல் கிண்ணத்தை வென்று தந்தார்.