பெங்களூரு: இலங்கை அணியை எளிதாக வென்றதன்மூலம் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை நியூசிலாந்து அணி அதிகப்படுத்திக் கொண்டுள்ளது.
இதனால், பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கிப்போயுள்ளது.
கோல்கத்தாவில் 11ஆம் தேதி சனிக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்கவுள்ள போட்டியில், அந்த அணி ஏதேனும் மாயம் செய்து பெருவெற்றி பெற்றால் மட்டுமே அதன் அரையிறுதிக் கனவு நனவாகலாம்.
நியூசிலாந்து தற்போது பத்துப் புள்ளிகளுடன் நாலாம் இடத்திலும் பாகிஸ்தான் எட்டுப் புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து அணியின் நிகர ஓட்ட விகிதம் 0.743ஆக உள்ளது. பாகிஸ்தானின் நிகர ஓட்ட விகிதம் 0.036.
இதனால், இங்கிலாந்தைக் கட்டாயம் வென்றாக வேண்டும் என்பதுடன், நிகர ஓட்ட விகிதத்திலும் நியூசிலாந்தைப் பாகிஸ்தான் விஞ்சியாக வேண்டும்.
அதாவது, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பந்தடித்து 300 அல்லது அதற்குமேல் ஓட்டங்களைக் குவித்தால், குறைந்தது 287 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றாக வேண்டாம்; இரண்டாவதாகப் பந்தடித்தால், 2.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிபெற வேண்டும்.
பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணி, வரும் 15ஆம் தேதி மும்பையில் நடக்கவிருக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாடும்.
அதற்கு மறுநாள் கோல்கத்தாவில் நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் பொருதவுள்ளன.
இறுதிப் போட்டி இம்மாதம் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்.