சென்னை சூப்பர் கிங்சுக்கும் குஜராத் டைட்டன்சுக்கும் இடையே நடக்க வேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டம் மழை காரணமாக திங்கட்கிழமை (மே 29) இரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (மே 28) இரவு நடக்க வேண்டிய ஆட்டத்தைக் காண இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் விளையாட்டரங்கில் குவிந்தனர்.
இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை.
இந்திய நேரப்படி இரவு 11 மணி வாக்கில் இறுதியாட்டம் மே 29க்கு மாற்றப்படுவதாக ஆட்ட நடுவர்கள் அறிவித்தனர்.
ஆட்டம் மாற்றப்பட்டது மகிழ்ச்சி தந்தாலும் வேறு நகரங்களில் இருந்து வந்த ரசிகர்கள் அகமதாபாத்தில் கூடுதலாக ஒரு நாள் இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
அதனால் சென்னை ரசிகர்கள் உட்பட பலர் அகமதாபாத் ரயில் நிலையங்களிலேயே உறங்கினர். அந்தப் படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
மே 29 அன்றும் மழை பெய்ய அதிக வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் ரசிகர்கள் மழை வரக்கூடாது என்று வேண்டி வருவதாகக் கூறினர்.
இறுதியாட்டம் மழையால் பாதிக்கப்பட்டு நடக்காமல் போனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கிண்ணம் வழங்கப்படும். புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் முடித்தது. சென்னை அணி 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் வந்தது