ஜெய்ப்பூர்: கடைசிப் பந்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அப்துல் சமத் பிடிகொடுத்து ஆட்டமிழந்ததும் வெற்றிக் கொண்டாட்டத்தில் இறங்கினர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர்.
ஆனால், அப்பந்து செல்லாப் பந்து (நோ பால்) என மூன்றாவது நடுவர் அறிவித்ததும் அம்மகிழ்ச்சி தடைபட்டது.
அதன்பின்னும் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால், சந்தீப் சிங் வீசிய பந்தை சமத் தூக்கியடித்து சிக்சராக மாற்ற, வெற்றி ஹைதராபாத் அணி வசமானது.
ஜெய்ப்பூர் அரங்கில் நேற்று இரவு ( மே 7) நடந்த இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிதான் இத்தகைய பரபரப்பான நாடகம் அரங்கேறியது.
முதலில் பந்தடித்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்களைக் குவித்தது. தொடக்கப் பந்தடிப்பாளர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 35 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 95 ஓட்டங்களையும் விளாசினர். அணித்தலைவர் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை எடுத்தார்.
கடினமான இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணியில் முன்வரிசைப் பந்தடிப்பாளர்கள் சற்று பொறுப்பாகவே ஆடினர். அன்மோல்பிரீத் சிங் 33, அபிஷேக் சர்மா 55, ராகுல் திரிபாதி 47, ஹென்ரிக் கிளாசன் 26 ஓட்டங்களை எடுத்தனர்.
ஆனாலும், நேரம் செல்ல செல்ல வெற்றிக்குத் தேவையான ஓட்ட விகிதமும் கூடிக்கொண்டே இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 41 ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலை.
வேகப் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் வீசிய 19வது ஓவரின் முதல் நான்கு பந்துகளில் மூன்று சிக்சர்களையும் ஒரு பவுண்டரியையும் அடித்து ஹைதராபாத் அணிக்கு நம்பிக்கை அளித்தார் நியூசிலாந்து ஆட்டக்காரர் கிளென் ஃபிலிப்ஸ். ஆனாலும், அடுத்த பந்திலேயே அவர் விக்கெட்டை இழந்தார்.
கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. குறிப்பாக, கடைசிப் பந்தில் ஐந்து ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலையில், சமத் சிக்சர் அடிக்க முயன்றார். ஆனால், அவர் தூக்கியடித்த பந்து ‘லாங் ஆஃப்’ திசையிலிருந்த எதிரணி வீரரின் கைகளில் தஞ்சம் புகுந்தது.
அந்நிலையில், கடைசிப் பந்து செல்லாப் பந்தாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் கடைசிப் பந்து வீசப்பட்டது. இம்முறை எல்லைக்கோட்டைத் தாண்டி சிக்சராக விழுந்த பந்து ராஜஸ்தான் அணியின் வெற்றியையும் தூக்கிக்கொண்டு போய்விட்டது.
சாதனைத் துளிகள்
ஐபிஎல்லில் ஹைதராபாத் அணி 200 ஓட்டங்களுக்கும் மேலான இலக்கை வெற்றிகரமாக விரட்டியது இதுவே முதன்முறை.
குறைந்த பந்துகளையே எதிர்கொண்டு ஆட்ட நாயகன் விருது வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் ஃபிலிப்ஸ். அவர் ஏழு பந்துகளில் 25 ஓட்டங்களை விளாசினார்.
ஜெய்ப்பூர் அரங்கில் அதிக ஓட்டங்களை (217) எடுத்துச் சாதித்தது ஹைதராபாத் அணி.