சிங்கப்பூர் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா ஒவ்வொரு நாளும் தமது ஓட்டத்தில் வேகம் கூட்டி வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2) அவர் மேலும் ஒரு தேசிய சாதனையை நிகழ்த்தினார்.
பிரிஸ்பன் நகரில்ஆஸ்திரேலியப் பொதுவிருது திடல்தடப் போட்டி நடந்து வருகிறது. அதில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் தகுதிச்சுற்றில் பெரேரா 22.89 நொடிகளில் ஓடி முடித்தார்.
இது, இதற்கு முந்திய அவரது சாதனை நேரத்தைவிட 0.27 நொடி குறைவு. கடந்த மார்ச் 25ஆம் தேதி 200 மீட்டர் ஓட்டத்தை சாந்தி பெரேரா 23.16 நொடிகளில் முடித்தார்.
சிங்கப்பூர் பெண்கள் ஓட்டப் பந்தயத்தில் 200 மீட்டர் பந்தயத்தை 23 நொடிகளுக்குக் கீழ் ஓடி முடித்த ஒரே வீராங்கனை சாந்தி பெரேராதான்.
கடந்த மூன்று நாள்களாக ஓட்டப் பந்தயத்தில் சாந்தி பெரேரா சாதனை மேல் சாதனை புரிந்து வருகிறார்.
சனிக்கிழமை (ஏப்ரல் 1) நடந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாந்தி பெரேரா வாகை சூடினார்.
இறுதிச் சுற்றில் அவர் புதிய தேசிய சாதனையையும் படைத்தார். பந்தயத்தை முடிக்க அவர் 11.37 நொடிகள் மட்டுமே எடுத்துக் கொண்டார்.
கடந்த ஒரு மாதத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் மும்முறை அவர் தமது சொந்த தேசிய சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.