ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாகத் திடல்தடப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது இந்தியா.
அந்நாட்டின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ஒவ்வொரு வீரரும் போட்டியில் ஐந்து முறை ஈட்டி எறியவேண்டும். வெற்றியாளர்களை நிர்ணயிக்க வீரர்களின் ஆகச் சிறந்த முயற்சி கருத்தில்கொள்ளப்படும்.
முதல் முயற்சியில் 87.03 மீட்டர் தூரத்திற்கு நீரஜ் ஈட்டி எறிந்தார். இரண்டாவது முறை இன்னும் சிறப்பாக 87.58 மீட்டருக்கு எறிந்தார்.
தங்கம் வெல்வார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனியின் ஜெஹானஸ் வெட்டர் பதக்கம் வெல்லவில்லை.
போட்டியில் வெள்ளி, வெண்கலம் ஆகிய இரண்டு பதக்கங்களையும் செக் குடியரசு வென்றது. அந்நாட்டின் ஜக்குப் வட்லெய்ச் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். வெண்கலத்தை வென்றவர் விட்டெஸ்லாவ் வெசெலி.
இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா இதுவரை ஏழு பதக்கங்களை வென்றுள்ளது. தோக்கியோ 2020தான் இந்தியா ஆகச் சிறப்பாகச் செய்துள்ள ஒலிம்பிக் விளையாட்டுகள்.
ஒலிம்பிக் விளையாட்டுகளில் தனிநபராக இந்தியாவிற்குத் தங்கம் வென்று தந்துள்ள இரண்டாவது வீரர் நீரஜ். இதற்கு முன் அபினாவ் பிந்திரா அதைச் செய்தார்.