சென்னை: தான் ஆடும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில்தான் நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.
"எப்போதுமே எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து திட்டமிட்டு வருகிறேன். எனது கடைசி அனைத்துலக ஆட்டம் என் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்தது. அதுபோல், நான் ஆடும் கடைசி டி20 போட்டி சென்னையில் நடைபெறும் என நம்புகிறேன். அது அடுத்த ஆண்டிலும் நடக்கலாம் அல்லது ஐந்து ஆண்டுகள் கழித்தும் நடக்கலாம்," என்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது டோனி பேசினார்.
எங்கு சென்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் பேராதரவு அளித்து வருவதாக டோனி குறிப்பிட்டார்.
"ஒட்டுமொத்தத்தில் பார்க்கையில், சென்னை அணியின் பலமே ரசிகர்கள்தான். தமிழ்நாடு, இந்திய எல்லை தாண்டியும் ரசிகர்களின் ஆதரவு தொடர்கிறது. துபாய், டர்பன், மும்பை என எங்கு சென்றாலும் அவர்கள் ஆதரவு அளிக்கின்றனர்.
"மோசமான காலகட்டத்திலும், ஈராண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமல் போனபோதும் அதிகமாகப் பேசப்பட்ட அணி சென்னை அணிதான்," என்றார் டோனி.
இவ்வாண்டு டோனி தலைமையிலான சென்னை அணி நான்காவது முறையாக ஐபிஎல் தொடரைக் கைப்பற்றியது.
ஆனாலும், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் தான் விளையாடுவது குறித்து டோனி உறுதியாகக் கூறவில்லை. அதே நேரத்தில், அடுத்த பருவத்திலும் விளையாடுவேன் என்பதை அவர் சூசகமாகக் குறிப்பிட்டார்.
சென்னை அணியைப் பொறுத்தமட்டில், அடுத்த பத்து ஆண்டுகளில் யார் யாரால் பங்களிக்க முடியும் என்பதை கவனமாக ஆராய வேண்டியுள்ளது என்ற டோனி, திறமையான வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் அப்போது கூறி இருந்தார்.