ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் இஷான் கிஷன் புதிய சாதனை
சட்டோகிராம்: ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டில் அதிவேக இரட்டை சதமடித்து, சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை இடம்பெறச் செய்தார் இந்திய இளம் வீரர் இஷான் கிஷன்.
பங்ளாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 126 பந்துகளில் அவர் இரட்டை சதத்தை எட்டினார். இதற்குமுன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 138 பந்துகளில் இரட்டை சதம் விளாசியிருந்ததே முன்னைய சாதனை.
131 பந்துகளில் 210 ஓட்டங்களை எடுத்து கிஷன் ஆட்டமிழந்தார். அதில் 24 பவுண்டரிகளும் 10 சிக்சர்களும் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் அவர் சதம் கடந்ததும் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராத் கோஹ்லியும் சதமடித்தார். அவர் 91 பந்துகளில் 113 ஓட்டங்களைக் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவருக்கு 44வது சதம்; ஒட்டுமொத்தத்தில் 72வது சதம்.
இதன்மூலம், அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதமடித்தோர் பட்டியலில் 72 சதங்களுடன் கோஹ்லி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் முதலிடத்திலும் ரிக்கி பாண்டிங் 71 சதங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
நேற்றைய போட்டியில் முதலில் பந்தடித்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 409 ஓட்டங்களைக் குவித்தது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தன் பங்கிற்கு 27 பந்துகளில் 37 ஓட்டங்களை எடுத்தார்.
பெரும் இலக்கை விரட்டிய பங்ளாதேஷ் அணி 34 ஓவர்களில் 182 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தோற்றுப்போனது. ஆயினும், முதலிரு போட்டிகளிலும் வென்றிருந்ததால் அவ்வணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
அடுத்ததாக, இந்தியா-பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. முதல் போட்டி வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.