லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் இனி கவனம் அறவே சிதறாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஆர்சனல்.
இந்தப் பருவம் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் ஆர்சனல் எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டது. 19 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தாங்கள் ஆதரிக்கும் குழு லீக் கிண்ணத்தை வெல்லும் என்ற நம்பிக்கை இதன் ரசிகர்களிடையே உள்ளது.
எனினும், சென்ற வாரம் லிவர்பூலுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தும் ஆட்டத்தில் வெற்றிகாணத் தவறியது ஆர்சனல். அதைத் தொடர்ந்து லீக் பருவம் நிறைவடைய இன்னும் எட்டே ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஆர்சனல் கவனத்தைச் சிதறவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
எஞ்சியுள்ள ஆட்டங்களில் இக்குழு பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நடப்பு வெற்றியாளர் மான்செஸ்டர் சிட்டியைச் சந்திக்கவேண்டும்.
சிட்டி அபாரமாக ஆடி வருகிறது.
லிவர்பூலுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனலிடம் ஒருவகை மெத்தனம் தென்பட்டது.இந்நிலையில், எஞ்சியிருக்கும் அனைத்து லீக் ஆட்டங்களையும் வென்றால் சிட்டி மீண்டும் கிண்ணத்தை வென்றுவிடும்.
பல ஆண்டுகளாக லீக் கிண்ணத்தை வெல்லாத ஒரு குழு பருவத்தின் கடைசி சில ஆட்டங்களில் கோட்டை விடுவது முன்னதாக நடந்திருக்கும் ஒன்று. அது நடக்காமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டாவுக்கு உள்ளது. சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு ஒன்பது மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெ்டைச் சந்திக்கிறது ஆர்சனல்.
இரவு 11.30 மணிக்கு நடைபெறும் மற்றோர் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட், நொட்டிங்ஹம் ஃபாரஸ்ட்டுடன் மோதுகிறது. நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட், தாக்குதல் வீரர் லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ் உட்பட யுனைடெட்டின் பல முக்கிய விளையாட்டாளர்கள் காயமடைந்துள்ளனர். இதனால் களையிழந்துபோகும் அபாயத்தில் உள்ள யுனைடெட் மனவுறுதியுடன் ஆடி தொடர்ந்து வெல்லவேண்டிய நிலையில் உள்ளது.