கோல்கத்தா: இந்த ‘ஐபிஎல்’ எனப்படும் இந்திய பிரிமியர் லிக் கிரிக்கெட் பருவத்தில் முதல் சதமடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சன்ரைசர்ஸ் ஐதராபாத் குழுவின் ஹேரி புரூக். கோல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான ஆட்டத்தில் 55 பந்துகளில் 100 ஓட்டங்களை எடுத்தார் இங்கிலாதைச் சேர்ந்த 24 வயது புரூக்.
இவர் ஆட்டத்தில் 12 பவுண்ட்ரிகளையும் மூன்று சிக்சர்களையும் அடித்து அசத்தினார்.
முதலில் பந்தடித்த ஐதராபாத் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ஓட்டங்களைக் குவித்தது. வெற்றி இலக்கை அடைய முடியாமல் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை மட்டுமே கோல்கத்தா எடுத்தது.
‘ஐபிஎல்’ வரலாற்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் மட்டுமே சதமடித்திருக்கின்றனர். அவர்களில் ஒருவராக புரூக் திகழ்கிறார்.
கெவின் பீட்டர்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், பாய்ர்ஸ்டோர் ஆகியோர் ‘ஐபிஎல்’லில் சதமடித்திருக்கும் இதர இங்கிலாந்து வீரர்கள்.
அண்மைக் காலமாக உலகக் கிரிக்கெட்டின் அனைத்து வகைப் போட்டிகளிலும் ஆகச் சிறந்த பந்தடிப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் புரூக்.
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக் குழுவான லாகூர் கலாண்டர்சுக்கு இவர் 48 பந்துகளில் 102 ஓட்டங்களை எடுத்து சதமடித்தார். அதுவே டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் இவர் அடித்த முதல் சதம்.
அதற்குப் பிறகு சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் புரூக்கை 1.35 மில்லியன் பவுண்ட் தொகைக்கு வாங்கியது ஐதராபாத்.
ஆகக் கடைசி நிலவரப்படி ‘ஐபிஎல்’ பட்டியலில் ஏழாம் இடத்தை வகிக்கிறது சன்ரைசர்ஸ் ஐதராபாத். நான்காவது இடத்தில் உள்ளது கோல்கத்தா நைட் ரைடர்ஸ்.
லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் குழு ராஜஸ்தான் ராயல்ஸ்.