நோம்பென்: கம்போடியாவில் நடந்துவரும் 32வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் பாய்மரப் படகோட்டக் குழு மூன்று தங்கப் பதக்கங்களையும் நான்கு வெள்ளிப் பதக்கங்களையும் கைப்பற்றியது.
ஐஎல்சிஏ 7 பிரிவில் இன்னும் ஒருமுறை தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினார் ரயன் லோ. தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை நான்கு முறை பங்கேற்றுள்ள இவருக்கு இது மூன்றாவது தங்கம்.
கடந்த 2017, 2019ஆம் ஆண்டுகளிலும் இதே பிரிவில் தங்கம் வென்றிருந்தார் 26 வயதான லோ.
சக சிங்கப்பூரரான ஐசக் கோ ஐஎல்சிஏ 4 பிரிவில் தங்கத்தைத் தமதாக்கிக் கொண்டார். 29er பிரிவில் போட்டியிட்ட எலின் டான் - சியா டெக் பின் இணை மூலம் பாய்மரப் படகோட்டத்தில் சிங்கப்பூருக்கு மூன்றாவது தங்கம் கிட்டியது.
பாய்மரப் படகோட்டப் போட்டிகளின் கடைசி நாளான நேற்று மேலும் ஐந்து பிரிவுகளில் சிங்கப்பூரர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் ஜேசன் டான், எல்கன் ஓ, ஜேனியா ஆங், ஈத்தன் சியா-செரில் ஓங் இணை ஆகியோர் தத்தம் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
இதற்குமுன் 2019ல் சிங்கப்பூர்க் குழு பாய்மரப் படகோட்டத்தில் பங்கேற்றது. அப்போது ஒரு தங்கம், ஐந்து வெள்ளி என ஆறு பதக்கங்கள் கிட்டின.