லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிற்காக அதிக முறை (540) களமிறங்கிய கோல்காப்பாளர் என்ற பெருமையைப் பெற்ற அதே நாளில், தமது தவற்றால் அக்குழுவின் தோல்விக்கும் காரணமாகி ஏமாற்றம் அளித்தார் டாவிட் ட கியா.
வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழுவிற்கு எதிராக லண்டன் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் ஆட்டத்தின் தொடக்கத்தில் யுனைடெட் குழு ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும், 27வது நிமிடத்தில் வெஸ்ட் ஹேம் குழுவின் பென்ராமா உதைத்த பந்தைத் தடுத்திருக்க முடியும் என்ற நிலையில், பந்து ட கியாவின் வலக்கையில் பட்டு, வலைக்குள் புகுந்து கோலானது.
இதனால் யுனைடெட் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்க நேர்ந்தது.
சில நாள்களுக்கு முன்புவரை, பட்டியலின் முதல் நான்கு இடங்களுக்குள் யுனைடெட் குழு லீக்கை முடித்து, அடுத்த பருவ சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெறுவது உறுதி என்ற நிலை இருந்தது.
இப்போதும் அக்குழு நான்காம் இடத்தில் நீடித்தாலும் ஐந்தாம் நிலையிலுள்ள லிவர்பூல் குழுவைவிட ஒரு புள்ளி மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், லிவர்பூலைக்காட்டிலும் கூடுதலாக ஓர் ஆட்டம் கைவசம் இருப்பது யுனைடெட் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
ஆயினும், ட கியாவைத் தற்காத்துப் பேசினார் யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹேக்.
“காற்பந்தில் தவறு நிகழ்வது இயல்புதான். ஆயினும், குழு விளையாட்டு என்பதால் மீண்டெழ வேண்டியது அவசியம்,” என்றார் டென் ஹேக்.
இப்பருவத்தில் இன்னும் நான்கு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் யுனைடெட்டின் தலைவிதி அக்குழு வீரர்களின் கைகளில்தான் உள்ளது என்றும் அவர் சொன்னார்.
சிட்டியை நெருங்கும் ஆர்சனல்
இதற்கிடையே, இன்னோர் ஆட்டத்தில் நியூகாசல் யுனைடெட் குழுவை அதன் சொந்த அரங்கிலேயே 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது ஆர்சனல் குழு. இதனையடுத்து, முதலிடத்திலுள்ள மான்செஸ்டர் சிட்டிக்கும் ஆர்சனலுக்குமான இடைவெளி ஒரு புள்ளியாகக் குறைந்துள்ளது.