லண்டன்: காற்பந்து உலகம் மாறி வருகிறது. அதையும் காற்பந்து நட்சத்திரங்களையும் மத்தியக் கிழக்கு நாடான சவூதி அரேபியா காந்தம் போல ஈர்த்து வருகிறது.
கிரீஸ், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளுடன் சேர்ந்து 2030ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்தது சவூதி. ஆனால் அந்த எண்ணத்தை அது தற்போது மாற்றிக்கொண்டது.
அதற்குப் பதிலாக 2034ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்த சவூதி இலக்கு கொண்டிருப்பதாகப் பேசப்படுகிறது.
இந்நிலையில், உலகக் காற்பந்து ரசிகர்களைத் தனது திசை நோக்கிப் பார்க்க சவூதியின் காற்பந்து லீக் போட்டி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. [Ϟ]தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த அல் நாசர், அல் ஹிலால் ஆகிய குழுக்களும் ஜெட்டா நகரைச் சேர்ந்த அல் இத்திஹாட், அல் ஆலி ஆகிய குழுக்களும் சவூதியின் பொது முதலீட்டு நிதியின்கீழ் கொண்டுவரப்பட்டன.
சவூதி காற்பந்து லீக் போட்டியில் களமிறங்கும் மேலும் நான்கு முக்கிய குழுக்கள் சவூதி நிறுவனங்களின்கீழ் கொண்டு[Ϟ]வரப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி புரோ காற்பந்து லீக்கில் விளையாடி வருகிறார். அவர் அக்குழுவில் இணைந்து சவூதி மண்ணில் விளையாடத் தொடங்கியதும் சவூதி புரோ காற்பந்து லீக்கின் மதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.
மற்ற நட்சத்திர வீரர்களையும் அது ஈர்த்து வருகிறது.
சவூதி புரோ காற்பந்துப் போட்டியில் விளையாடாமல் இன்டர் மயாமிக்காக விளையாட அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி முடிவெடுத்தார். இது சவூதி லீக்கிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியபோதிலும் இம்மாதத் தொடக்கத்தில் அல் இத்திஹாட் குழுவில் பிரெஞ்சு நடத்திர வீரர் கரீம் பென்சிமா இணைந்தது அதன் மதிப்பையும் நம்பகத்தன்மையையும் உயர்த்தியுள்ளது.
காற்பந்து உலகில் வளர்ந்து வரும் சவூதியின் செல்வாக்கு அதன் மண்ணில் நடைபெறும் காற்பந்தாட்டங்களுடன் நின்றுவிடவில்லை.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டியில் களமிறங்கும் நியூகாசலின் 80 விழுக்காடு பங்குகளை சவூதியின் பொது முதலீட்டு நிதி வைத்திருக்கிறது.
இந்நிலையில், இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் வூல்வர்ஹேம்டன் வண்டரர்ஸ் (உல்வ்ஸ்) குழுவின் அணித் தலைவராக இருந்த ரூபன் நிவேஸ் நேற்று முன்தினம் சவூதியின் ஆல் ஹிலால் குழுவில் இணைந்தார்.
போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர மத்தியத் திடல் ஆட்டக்காரரான நிவேஸ் அல் ஹிலால் குழுவுடன் மூன்றாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
உல்வ்ஸ் குழுவைப் பொறுத்தவரை அந்த வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் பெரிய தொகைக்கு நிவேஸ் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது[Ϟ]குறித்து மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.