லீட்ஸ்: கட்டாயம் வென்றால் மட்டுமே தொடரில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி எழுச்சியுடன் ஆடி, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்துள்ளது.
இங்கிலாந்தில் நடக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதலிரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வென்றது.
இந்நிலையில், மூன்றாவது போட்டி இம்மாதம் 6ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் மிட்செல் 118 ஓட்டங்களை விளாச, ஆஸ்திரேலியா 263 ஓட்டங்களை எடுத்தது. அதன்பின் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 224 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின் 251 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பந்தடிக்கத் தொடங்கிய இங்கிலாந்து, மூன்று விக்கெட்டுகள் எஞ்சியிருக்க, நான்காம் நாளிலேயே வெற்றியைச் சுவைத்தது.
இதனையடுத்து, தொடர் 2-1 என்ற நிலையை எட்டியுள்ளது. இன்னும் இரு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், நான்காவது போட்டி இம்மாதம் 19ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்கவுள்ளது.