கயானா: அனைத்துலக டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை இரவு நடந்த 3வது போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 49 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யா 101 சிக்சர்களை விளாசி இருக்கிறார்.
ரோகித் சர்மா (182 சிக்சர், 140 போட்டிகள்), விராத் கோஹ்லி (117 சிக்சர், 107 போட்டிகள்) இருவரும் அனைத்துலக டி20 போட்டிகளில் நூறு சிக்சர்களுக்குமேல் அடித்துள்ள மற்ற இரண்டு இந்திய வீரர்கள்.
சூர்யகுமார் 44 பந்துகளில் நான்கு சிக்சர் உட்பட 83 ஓட்டங்களைக் குவிக்க, 3வது போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலிரு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 4வது போட்டி 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.