கலப்பு தற்காப்புக் கலையில் சிங்கப்பூர் வீரர் அமீர் கான் கடைசியாக சண்டையிட்டு கிட்டத்தட்ட ஓராண்டு ஆகப்போகிறது. அவர் சண்டையிடுவதில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டாரா என்பது குறித்த பேச்சுகூட எழுந்தது.
ஆனால், அத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் இவர். செப்டம்பர் 30ஆம் தேதி சிங்கப்பூர் உட்புற அரங்கில் இடம்பெறவுள்ள ‘ஒன் ஃபைட் நைட் 14’ நிகழ்வில் பிலிப்பீன்சைச் சேர்ந்த எட்வர்ட் ஃபொலாயாங்கை அமீர் எதிர்கொள்கிறார்.
“நான் ஓய்வுபெற்றுவிட்டேனா என மக்கள் என்னிடம் கேட்கின்றனர். எனக்கு 28 வயதாகிறது. நான் இன்னும் இளமையாக உள்ளேன். எனவே நான் ஓய்வுபெறுகிறேன் என நினைத்துவிடாதீர்கள்,” என்று கூறிய அமீர், ஒப்பந்த விவகாரத்தால் தாம் சிறிது காலம் சண்டையிடவில்லை என்றார்.
கடைசியாக அமீர் பங்கேற்ற ஏழு சண்டையிடுதல் போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தார். இந்நிலையில், கெட்ட பழக்கங்களைக் கைவிட்டு தமது ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் பயிற்சி பெற்று வந்துள்ளதாக இவர் குறிப்பிட்டார்.