ஹாங்சூ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் காற்பந்துப் போட்டியில் சீனாவிடம் 5-1 எனும் கோல் கணக்கில் படுதோல்வி கண்டது இந்தியா.
இந்த ‘ஏ’ பிரிவு ஆட்டத்தின் முற்பாதி ஓரளவு சமமாகச் சென்றது. எனினும், பிற்பாதியாட்டத்தில் இந்திய அணி சோபிக்கத் தவறியது.
பல இந்திய காற்பந்துக் குழுக்கள் தங்கள் வீரர்கள் பலரை தேசிய அணிக்கு அனுப்ப மறுத்ததால் இந்தியா பல முக்கிய விளையாட்டாளர்கள் இல்லாமல் களமிறங்க நேரிட்டது.
‘ஏ’ பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் பங்ளாதேஷை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது மியன்மார்.
‘இ’ பிரிவில் குவைத்தை 9-0 எனும் கோல் கணக்கில் வெளுத்துக்கட்டியது தென்கொரியா. ‘இ’ பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் தாய்லாந்து, பஹ்ரேனுடன் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.
‘பி’ பிரிவில் வியட்னாம், மங்கோலியாவை 4-2 எனும் கோல் கணக்கில் வென்றது, சவூதி அரேபியாவும் ஈரானும் கோலின்றி சமநிலை கண்டன. ‘எஃப்’ பிரிவில் வடகொரியா, தைவானை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது, அதே கோல் எண்ணிக்கையில் கர்கிஸ்தானை வென்றது இந்தோனீசியா.