ஜகார்த்தா: இந்தோனீசியா 2034 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியை ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூருடன் இணைந்து நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.
போட்டியை ஏற்று நடத்துவதற்கான விண்ணப்பம் தொடர்பாக இந்தோனீசியா ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தத் தகவலை இந்தோனீசிய காற்பந்துச் சங்கத்தின் தலைவர் எரிக் தோஹிர் புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
2034 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியை ஏற்று நடத்த ஆசிய, ஓசெனிய நாடுகளுக்கு அனைத்துலக காற்பந்துக் கூட்டமைப்பு கடந்த வாரம் அழைப்பு விடுத்தது.
அதைத்தொடர்ந்து இந்தோனீசியா தற்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
“ஆஸ்திரேலியாவுடன் பேசி வருகிறோம், இரு நாடுகளுடன் இணைந்து போட்டியை ஏற்று நடத்த சிங்கப்பூரும் மலேசியாவும் விருப்பம் தெரிவித்துள்ளன,” என்றார் எரிக் தோஹிர்.
ஆஸ்திரேலியாவும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியை ஏற்று நடத்த ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் மேல்விவரம் கேட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா போன்ற 10 ஆசியான் நாடுகள் இணைந்து, 2034 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியை ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்திருந்தன.
அண்மையில் சவூதி அரேபியாவும் 2034 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியை ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தது.
மொரோக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகியவை இணைந்து 2030 உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்துகின்றன.
போட்டியின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் முதல் மூன்று ஆட்டங்கள் மட்டும் லத்தீன் அமெரிக்க நாடுகளான அர்ஜெண்டினா, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளில் நடைபெறும்.
2026 உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஏற்று நடத்துகின்றன. அதில் 48 அணிகள் விளையாடவுள்ளன.