புதுடெல்லி: இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பாகச் செய்யக்கூடாது என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) எண்ணம் என்று அந்த அணியின் மூத்த வீரர்களில் ஒருவர் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரியம் பதவிப் போராட்டத்தில் இறங்கியிருப்பதாகவும் பாகிஸ்தான் அணி அடிசறுக்கவேண்டும் என்பது அதன் எண்ணம் என்றும் அவர் சொன்னார். அணியை வழிநடத்துபவர்கள், யாரை அணியில் சேர்த்துக்கொள்வது போன்ற முடிவுகளில் யாரும் தலையிடாமல் இருக்க வாரியம் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
“அணி தோல்வியடையவேண்டும் என்பதே வாரியத்தின் விருப்பம். தாங்களாகவே மாற்றங்களைச் செய்துகொள்ளவும் யார் அணியை வழிநடத்துவார், எந்த விளையாட்டாளர்கள் அணியில் இடம்பெறுவர் போன்ற முடிவுகளைத் தாங்களே எடுப்பதற்கும் வகைசெய்ய பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தை வெல்லாமல் இருக்கவேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்,” என்று அந்த பாகிஸ்தான் விளையாட்டாளர் கூறியதாக டைம்ஸ் நவ் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாக நம்பப்படும் வீரரின் பெயர் வெளியிடப்படவில்லை. உலகக் கிண்ணப் போட்டியில் ஆடிவரும் பாகிஸ்தான் அணியில் அவர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாண்டு நடைபெற்ற ஆசிய கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் சரியாக விளையாடவில்லை. அப்போது அணியின் விளையாட்டாளர்களுக்கிடையே சண்டை மூண்டது.
தனிப்பட்ட முறையில் நடந்த அச்சண்டையை வாரியம் வெளிப்படையாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டினார். அதிருப்தி நிறைந்த சூழலை உருவாக்க வாரியம் அவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.
அச்சம்பவத்தை ஓர் எடுத்துக்காட்டாக சம்பந்தப்பட்ட பாகிஸ்தானிய வீரர் முன்வைத்தார்.
உலகக் கிண்ணப் போட்டியில் செவ்வாய்க்கிழமையன்று பங்ளாதேஷைச் சந்திக்கிறது பாகிஸ்தான். பங்ளாதேஷ் இதுவரை ஆடிய ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் வென்று இதர ஆட்டங்களில் தோல்வியடைந்தது.
நான்கு ஆட்டங்களில் தோல்வியடைந்த பாகிஸ்தான், இரண்டில் வென்றுள்ளது.
இதற்கிடையே, அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) பாகிஸ்தானுக்கு அபராதம் விதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக ஓவர் வீசியதற்காக பாகிஸ்தானுக்கு ஆட்டக் கட்டணத்தில் 20 விழுக்காடு தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.