பெங்களூரு: தேவைப்பட்டால் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஐந்துக்கும் அதிகமான பந்துவீச்சாளர்களைக் களமிறக்கத் தயார் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியாவும் நெதர்லாந்தும் மோதின. இதில் இந்திய அணி 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. முதலில் பந்தடித்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 410 ஓட்டங்கள் குவித்தது. ரோகித் சர்மா 61, ஷுப்மன் கில் 51, விராத் கோஹ்லி 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
நான்காவது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 128 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கே.எல். ராகுல் 102 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 250 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரோகித் சர்மா, விராத் கோஹ்லி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து லீக் ஆட்டங்கள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.
“இந்த உலகக் கிண்ணப் போட்டியில் எங்களுக்கு ஒவ்வோர் ஆட்டமும் மிக முக்கியமானது. லீக் ஆட்டங்கள் அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டோம். அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
“முதலில் களமிறங்கி பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்துவிட்டால் போதும். மற்ற விஷயங்களை நமது பந்துவீச்சாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். அந்த அளவுக்கு எங்கள் பந்துவீச்சு வலிமையுடன் உள்ளது. ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டும் இருக்கும்போது, கூடுதல் பந்து வீச்சாளர்களைச் சோதித்து பார்ப்பதும் அவசியமாக உள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்பது பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர்.
“நியூசிலாந்துடனான அரையிறுதிப் போட்டியில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவோம். அரையிறுதி போட்டியிலும் கூடுதல் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவீர்களா என்று கேட்கிறீர்கள். தேவைப்பட்டால் ஐந்துக்கும் அதிகமான பந்துவீச்சாளர்கள் அந்தப் போட்டியில் பந்துவீசுவர். இந்தத் திட்டம் கைகொடுக்கும் என்றால் மட்டும்தான் அதை நாங்கள் செயல்படுத்துவோம்.
“அணியில் ஐந்து தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். ஆகையால், தேவைக்கு ஏற்ப மட்டுமே கூடுதல் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவர். இதுவே எங்களது திட்டம்,” என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.