லண்டன்: மால்டா காற்பந்து அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற யூரோ 2024 தகுதிச்சுற்று ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றும் இங்கிலாந்தின் விறுவிறுப்பு இல்லாத ஆட்டத்திறனை அதன் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேத் குறைகூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெறும் யூரோ கிண்ணப் போட்டிக்கு இங்கிலாந்து ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டது.
எனினும், ஃபிஃபா உலகத் தரவரிசைப் பட்டியலில் மால்டா அணி 171வது இடத்தில் உள்ள வேளையில், அந்த அணிக்கு எதிராக இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் விளையாடிய விதம் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.
“ஆட்டத்தை நல்லபடியாக தொடங்கவில்லை என்றால், பின்னர் நன்றாக ஆடுவதற்கு மிகவும் சிரமமாகிவிடும். எமது ஆட்டக்காரர்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியிருக்கலாம் என்பது எனது கருத்து,” என்றார் சவுத்கேட்.
‘சி’ பிரிவில் ஆறு ஆட்டங்களில் வெற்றி, ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டுள்ள இங்கிலாந்து இதுவரை 19 புள்ளிகளைப் பெற்றுள்ளது.