உள்ளூர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மூவருக்கு சிங்கப்பூர்ப் பயிற்றுவிப்பாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடந்துவரும் ‘ஐசிசிஇ ஜிசிசி’ எனும் 14வது அனைத்துலகப் பயிற்றுவிப்பாளர் மாநாட்டின் தொடக்க நாளில் கலந்துகொண்டு அவ்விருதுகளை வழங்கினார் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்.
2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விருதுகள், கொவிட்-19 தொற்றுப் பரவலால் மூவாண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் முறையாக வழங்கப்பட்டன.
விருது பெற்றவர்களில் ‘ஆக்டிவ்எஸ்ஜி’ காற்பந்துக் கழகம் (உட்லண்ட்ஸ்) தலைமைப் பயிற்றுவிப்பாளரும் சிங்கப்பூர் விளையாட்டுப்பள்ளிக் காற்பந்துப் பயிற்றுவிப்பாளருமான இசா ஹலிமும் ஒருவர்.
“இவ்விருது எங்கள் உழைப்புக்குக் கிட்டிய பேரங்கீகாரம். இதன்மூலம் மேலும் கடுமையாக உழைத்து, அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை வழிநடத்த நாங்கள் உத்வேகம் பெறுகிறோம்,” என்றார் திரு ஹலிம்.
அதே சமயத்தில், சிங்கப்பூர்ப் பயிற்றுவிப்பாளர்களுக்கு வெளிநாட்டு இணைப்புகள் உட்பட, படிப்பினைகளைப் பரிமாற்றிக்கொண்டு மேம்படக் கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படுவதை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.
தன் பயிற்றுவிப்பாளர்ப் பயணத்தைத் தொடங்கிவைத்த ‘ஆக்டிவ்எஸ்ஜி’ காற்பந்துக் கழகத்திற்கும் தான் இளையர் என்றபோதும் தன்னைப் பணியில் அமர்த்திய சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளிக் காற்பந்துக் கழகத்திற்கும் நன்றி கூறினார்.
அவரோடு தேசிய இளையர் வில்வித்தை, உடற்குறையுள்ளோருக்கான வில்வித்தைப் பயிற்றுவிப்பாளர் பாங் சிங் லியாங்கும் ‘ஆக்டிவ்எஸ்ஜி’ கைப்பந்துக் கழகத் துணைப் பயிற்றுவிப்பாளர் வின்சன் சியோங்கும் விருது பெற்றனர்.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாடு, உலகெங்கிலும் இருந்தும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள் என பலதரப்பினரையும் பயிற்றுவிப்பில் உள்ள தற்போதைய, வருங்காலச் சவால்களை எதிர்கொள்ள இணைக்கிறது.
‘மேலும் சிறந்த எதிர்காலத்துக்காகப் பயிற்றுவிப்பு’ என்பது இவ்வாண்டு மாநாட்டின் கருப்பொருள். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, ஆனால் நிச்சயமற்ற எதிர்காலத்திற்குத் தயாராக, சிறந்த பயிற்றுவிப்பு வழிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
வளர்ந்துவரும் விளையாட்டுத்துறைக்குக் கிடைத்த அங்கீகாரம்
இம்மாநாட்டை, பெய்ஜிங், தோக்கியோவிற்கு அடுத்து ஆசியாவில் மூன்றாம் நகராகவும் தென்கிழக்காசியாவில் முதல் நகராகவும் சிங்கப்பூரில் நடத்துவதில் பெருமைப்படுவதாக அமைச்சர் டோங் கூறினார்.
விளையாட்டுகளுக்கு இங்கு வழங்கப்படும் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தின் எதிரொலியாக இவ்வாய்ப்பைச் சுட்டினார் அமைச்சர்.
பல அனைத்துலகப் பயிற்றுவிப்பு, விளையாட்டு மாநாடுகளில் சிங்கப்பூர் பங்குபெறக் காரணமான ‘கோச்எஸ்ஜி’ திட்டத்தைப் பாராட்டிய அவர், தற்போது சிங்கப்பூரில் 89 விளையாட்டுகளில் 7,000 பயிற்றுவிப்பாளர்கள் தேசிய பதிவேட்டில் பதிவுசெய்துள்ளதைக் குறிப்பிட்டார்.
பயிற்றுவிப்பாளர்களைச் சக பயிற்றுவிப்பாளர்களோடும் வழிகாட்டிகளோடும் இணைக்கும் ‘கோச்கனெக்ட்’, ‘கேம் ஃபார் லைஃப்’ திட்டங்களையும் அனைத்துலக ஆலோசனைக் குழுவையும் உருவாக்கியதற்கும் ‘கோச்எஸ்ஜி’ திட்டத்தை மெச்சினார் அமைச்சர் டோங்.
உடற்குறைபாடுள்ளோரை விளையாட்டுகளில் இணைப்பதன் அவசியத்தையும் விளையாட்டுகளில் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய அமைச்சர், அவை தொடர்பான செயல்திட்டங்களையும் விவரித்தார்.