காற்பந்தில் பரம வைரிகளாக இருந்தாலும் சமூக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றில் இரு காற்பந்துச் சங்கங்களும் கைகோத்து செயல்பட்டுள்ளன.
அக்காற்பந்துச் சங்கங்கள் தங்களின் அறநிறுவனங்கள் மூலம், பேரிடர் தொடர்பான வசைமொழிகளுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளன.
ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி இவ்விரு குழுக்களும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் சந்திக்க உள்ளன. அதற்கு முன்னதாக, தங்கள் ரசிகர்கள் 1958 மியூனிக் விமான விபத்து, ஹில்ஸ்புரோ பேரிடர், ஹெய்சல் விளையாட்டரங்கப் பேரிடர் ஆகியவற்றை மையமாகக் கொண்ட வசைமொழிகளை எதிரணி ரசிகர்களுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டாம் என்று அக்குழுக்கள் அறிவுரை கூறி வருகின்றன.
அவ்வாறு செய்வது குற்றவியல் நடவடிக்கைக்கு இட்டுச் செல்லும் என்று அக்குழுக்கள் தங்கள் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
“லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட் குழுக்கள் ஏற்று நடத்தும் இந்த இயக்கத்துக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். இத்திட்டத்தை இன்னும் மேம்படுத்த நாங்கள் அக்குழுக்களுடன் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறோம்,” என்றார் பிரிமியர் லீக்கின் சமூகப் பிரிவின் இயக்குநர் நிக் பெர்சார்ட்.
இந்த இரு அறநிறுவனங்களும் பிரிமியர் லீக் நிறுவனத்துடன் இணைந்து இதை ஒரு வருடாந்தர நிகழ்வாக மான்செஸ்டர், லிவர்பூல் நகரங்களில் இயக்கத்தை நடத்த கடப்பாடு கொண்டுள்ளன.
மார்ச் 17ஆம் தேதி லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட் குழுக்கள் காலிறுதிப் போட்டியில் சந்தித்தபோது, மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் ரசிகர் ஒருவர், லிவர்பூல் ரசிகர்களுக்கு எதிராக பேரிடர் தொடர்பான வசைமொழிகளைப் பயன்படுத்தியதற்காக, மான்செஸ்டர் பெருநிலக் காவல்துறை அவர் மீது குற்றம் சாட்டியது.
ஜனவரி மாதம் 7ஆம் தேதி லிவர்பூல் குழுவுக்கும் ஆர்சனல் குழுவுக்கும் இடையே நடைபெற்ற எஃப்ஏ கிண்ண ஆட்டம் ஒன்றில் லிவர்பூல் ரசிகர்களுக்கு எதிராக ஆர்சனல் குழு ரசிகர்கள் மூவர் பேரிடர் தொடர்பான வசைமொழிகளைப் பயன்படுத்தியதற்காக அவர்களுக்கு எதிராக ஆர்சனல் தடை விதித்தது என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.