சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தேர்தல் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கான அஞ்சல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 11) தொடங்கியது.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இடம்பெறுகிறது.
இதனிடையே, 85வயதுக்கு மேற்பட்டோருக்கான அஞ்சல் வாக்குகளை வீடு வீடாகச் சென்று சேகரிக்கும் பணி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் அஞ்சல் வாக்குகளைப் பதிவுசெய்யும் பணி தொடங்கியுள்ளது.
இதன் தொடர்பில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை அஞ்சல் வாக்குகளை செலுத்த சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட மூன்று தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகத்தில் சிறப்பு அஞ்சல் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
“தகுதியுள்ள காவல்துறையினர் வாக்குச்சாவடிகளுக்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் காவலர் அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்கலாம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.