சென்னை: தமிழகம் முழுவதும் 24 ஏடிஎம் மையங்களில் நான்கு நாள்களில் 485 முறை நூதன திருட்டில் ஈடுபட்டதாகவும் யூடியூப் காெணாளியைப் பார்த்து ரூ.1 கோடி வரை கொள்ளை அடித்திருப்பதாகவும் போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் கைதாகி உள்ள மூன்று கொள்ளையர்கள் தெரிவித்து உள்ளனர்.
வடமாநிலத்தைச் சேர்ந்த எஸ்பிஐ வங்கி ஊழியர்களுக்கும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக அவர்கள் கூறினர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) பணம் நிரப்பும் வசதி கொண்ட ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.1 கோடிக்கு மேல் கொள்ளை அடித்து விட்டு திருடர்கள் தப்பியோடினர்.
அதிர்ச்சியூட்டும் இந்தச் சம்பவம் தொடர்பில், ஹரியானாவில் தலைமறைவாக இருந்த வடமாநிலக் கொள்ளையர்கள் மூவரை தனிப்படை போலிசார் கைது செய்தனர்.
ஏடிஎம் மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில், இக்கும்பல் சென்னை, திருவல்லிக்கேணி யில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இருசக்கர வாகனக் கடைகளில் பதிவான கைபேசி எண்களைக் கொண்டு விசாரணை நடத்திய தனிப்படை போலிசார், முக்கிய குற்றவாளி அமீர், 37, என்பவரை ஹரியானாவில் கைது செய்தனர். அமீர் அளித்த தகவலின்படி மேலும் இருவர் கைது ெசய்யப்பட்டனர்.
போலிசாரிடம், அமீர் அளித்துள்ள வாக்குமூலத்தில், "ஹரியானா மாநிலம், பல்லப்கர்க் பகுதியில் வசித்து வருகிறேன். நானும் என் கூட்டாளிகளும் ஐந்து குழுக்களாகப் பிரிந்து சென்னையில் ஜூன் 15 முதல் 18 வரை எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களில் கொள்ளையடித்தோம். என்னிடம் இருந்து ரூ.4.50 லட்சத்தை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்," என்றார்.
மற்ற கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை போலிசார் ஹரியானாவில் முகாமிட்டுள்ளனர்.
'கூகல் மேப்' உதவியுடன் இந்தக் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக உயர் போலிஸ் அதிகாரிகள் கூறி னர். இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலிசுக்கு மாற்றப்பட்டுள்ளது.