மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் அருகே விற்பனைக்காகக் கொண்டு செல்லப்பட்ட மிகவும் தொன்மைவாய்ந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் சித்தாமூர் சந்திப்பு அருகே நேற்று அதிகாலை 4 மணி அளவில், போலிசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கி ளில் வந்த இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தொன்மையான மீனாட்சி அம்மன் சிலை உள்பட சாமி சிலைகளை ரூ.1 கோடிக்கு விற்பதற்காக மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், இந்தச் சிலை விற்பனையில் மேலும் ஐவருக்குத் ெதாடர்புள்ளதாகவும் கூறினர்.
இதையடுத்து, சிலைகளை விற்க முயன்ற கார்த்திக், 29, மூர்த்தி, 33, சுந்தரமூர்த்தி, 25, குமரன், 30, அசோக், 33, அறிவரசு, 43, அப்துல்ரகுமான், 24, ஆகிய எழுவரை கைது செய்தனர்.
விசாரணையில் வேலூரில் பொய்கையாற்றில் மணலில் புதைக்கப்பட்ட ஒரு தொன்மையான ரிஷபச் சிலையும் மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் ஏழு பேரையும் கூடுதல் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாண்டி மகாராஜா முன்பு முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.