சென்னை: மத்திய அரசுப் பணியில் சேர்வதற்காக போலிச் சான்றிதழ்களை அளித்துள்ள 300 வட மாநிலத்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த மோசடி விவகாரம் குறித்து வெளிவரும் தகவல்கள் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கிராம தபால் நிலைய ஊழியர்கள், மத்திய ரிசர்வ் காவல் படை, ரயில்வே ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தேர்வு பெற்றவர்கள் அளித்துள்ள சான்றிதழ்கள் வழக்கமான நடைமுறையின் கீழ் தொடக்க நிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அதிகாரிகளுக்கு திடீர் சந்தேகம் எழுந்தது.
குறிப்பாக வட மாநிலங்கள், கர்நாடகாவைச் சேர்ந்த சிலரது சான்றிதழ்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததாகவும் குறிப்பாக பத்தாம் வகுப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் போலியாக இருக்கும் என்றும் அவர்கள் சந்தேகித்துள்ளனர்.
பீகார், ஜார்க்கண்ட், கர்நாடகாவைச் சேர்ந்த பலர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்தது போல போலிச் சான்றிதழ்களை அளித்துள்ளனர்.
அந்தச் சான்றிதழ்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அளித்ததுபோல் நாடகமாடி உள்ளனர். ஆனால் அனைத்து போலி மதிப்பெண் சான்றிதழ்களும் ஒரே மாதிரியாக காட்சியளித்துள்ளன. பெயர்கள் மட்டுமே மாறி உள்ளன என்பதைக் கவனித்த அதிகாரிகள், இதில் மோசடி நடந்திருப்பதை புரிந்துகொண்டனர்.
இதையடுத்து சான்றிதழ்களைச் சரிபார்ப்பது என முடிவானது. அதன்படி சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ள சுமார் சில நூறு சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைகள், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைத்துள்ளது.
தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து, மத்திய அரசுத்துறைகள் அனுப்பியதில் சுமார் 300 சான்றிதழ்கள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த மோசடியில் தொடர்புடைய ஊழியர்கள் தொடர்பாக அவர்களுடைய சொந்த மாநிலங்களில் உள்ள காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளன.
அவர்கள் தமிழக பள்ளிக்கல்வியின் கீழ்வரும் மாநில அரசு தேர்வுத்துறையுடன் இணைந்து சான்றிதழ்களைச் சரிபார்க்கும் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளனர். போலி மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்து மத்திய அரசுப் பணியில் சேர்ந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து கர்நாடகாவைச் சேர்ந்த இருவர் அம்மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் மற்ற மாநிலத்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போலி மதிப்பெண் சான்றிதழை அளித்து வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பது விவாதப் பொருளாகி உள்ளது.
போலிச் சான்றிதழ் கொடுத்து மத்திய அரசுப் பணியில் சேர்ந்தனர்