சீர்காழி: இந்தியாவிலேயே முதன்முறையாக இளஞ்செழியன் என்ற விவசாயி, சீர்காழி அருகே செயற்கையாக அலையாத்தி காடுகளை உருவாக்கி அதில் கொடுவா மீன், கல் நண்டுகளை வளர்த்து அதிக லாபம் ஈட்டி வருவது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுனாமிக்குப் பிறகு பல கடற்கரை கிராமங்கள் தரிசு நிலங்களாக மாறிவிட்டன என்றும் அங்கே அலை யாத்திக் காடுகளை உருவாக்க தமிழக அரசு மானியம் வழங்கவேண்டும் என்றும் இதனால் ஏராளமான மக்களின் வாழ்வாதாரம் பயன் பெறும் என்றும் இளஞ்செழியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் கடல்சார் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். ஒன்றை ஒன்று உட்கொண்டு வளரும் கடல்வாழ் உயிரினங்களை வளர்க்க ஆர்வம் கொண்ட இவர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள புளியந்துறை கிராமத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் முதலில் இறால் பண்ணையை உருவாக்கினார்.
ஆனால், இறால்களுக்கு வரும் நோயால் ஏராளமான இறால்கள் அழிந்து இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அதே குட்டையில் கொடுவா மீன், கல் நண்டுகளை வளர்க்க ஆரம்பித்தார்.
ஆனால், வளர்ந்த கொடுவா மீன்களும் கல் நண்டுகளும் தன் குஞ்சுகளை தானே சாப்பிட்டு வந்த தால் இந்தத் தொழிலும் லாபமின்றி முடங்கியது.
இந்நிலையில், அந்தமானில் உள்ளதுபோல் அலையாத்திக் காடு களை உருவாக்க 1,800 அலை யாத்திச் செடிகளை வாங்கி வந்து இளஞ்செழியன் நடவு செய்தார். இந்தச் செடிகளின் வேர்களுக்கு இடையே மீன்களும் நண்டுகளும் நல்ல வளர்ச்சி அடைந்து, உற்பத்தி அதிகரித்து உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இதுகுறித்து இளஞ்செழியன் கூறுகையில், "கொடுவா மீன், கல் நண்டுகள் தனது இனத்தையே அழித்துச் சாப்பிடும் குணம் கொண்டவை. திறந்தவெளியில் குட்டை அமைத்து இவற்றை வளர்த்தால் உற்பத்தி அதிகம் இருக்காது. இதுபோன்ற அலையாத்திக் காடுகளின் நடுவே வளர்க்கும்போது பெரிய வகை மீன்கள், கல் நண்டுகளிடம் இருந்து சிறிய வகை மீன்களும் நண்டுகளும் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேர்களில் சென்று தஞ்சமடைவதால் மீன்களின் வளர்ச்சி அதிகரித்து, உற்பத்தி அதிகரிக்கிறது," என்றார்.