தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள நாகதாசம்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ராக்கெட், வாணவெடி உள்பட பல பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
விற்பனை செய்வதற்காக ஆலையிலுள்ள சரக்கு வைப்பறையில் ஏராளமான பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்றுக் காலை அந்த ஆலையில் அதே பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள், 50, காவேரி மனைவி முனியம்மாள், 65, சிவாலிங்கம் ஆகிய மூன்று பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சரக்கு வைப்பறையில் இருந்து திடீரென புகை வந்தது. அடுத்த ஒருசில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் அந்த அறை வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் உள்ள வீடுகள் குலுங்கின. வெடிப்புச் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் பீதியுடன் ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது பட்டாசு தயாரிக்கும் ஆலையின் சரக்கு வைப்பறை சின்னபின்னமாகிக் கிடந்தது. அங்கு வேலை செய்த முனியம்மாள், பழனியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சிவாலிங்கம் என்ற பெண், படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரூ.3 லட்சம் நிவாரணம்
இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்து குறித்து தாம் கவலையுற்றதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 3 லட்சம், கடுமையாகக் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிவாலிங்கத்துக்கு ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார்.