சென்னை: ரவுடிகள் இல்லாத மாநகரமாக சென்னை மாநகரை மாற்ற அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
புதிய காவல் ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களின் குறைகளுக்கு காவல்துறை உடனடியாக தீர்வு காண வேண்டும் என தாம் வலியுறுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
“எதிர்காலத்தில் மாதம் ஒருமுறை இதுபோன்ற குறைதீர்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் எழுதித் தரவேண்டும். இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் இருக்கிறது,” என்றார் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.
இணையக் குற்றங்கள் (சைபர் கிரைம்) தொடர்பாக துரித கதியில் விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சென்னையில் ரவுடிகளின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
“ரவுடிகளுக்கு எதிராக சென்னையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் போகிறோம்.
“எனவே ரடிவுகள் இல்லாத மாநகரமாக சென்னை மிக விரைவில் மாறும். காவல்துறை அதை உறுதி செய்யும்,” என்றார் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.
சென்னையில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டதாகவும் குறிப்பாக இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.