புதுக்கோட்டையில் காதணி விழாவிற்கு தாய் மாமன்கள் பத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் பாரம்பரிய முறைப்படி சீர்கொண்டு வந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் இளையராஜா – நவநீதா தம்பதிகளின் பிள்ளைகள் ரிக்க்ஷனா, சுதிக்சன் ஆகியோரது காதணி விழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு பிள்ளைகளின் தாய் மாமன்களான அனவயல் ஆண்டவராயபுரத்தை சேர்ந்த நவீன் சுந்தர், நவசீலன் இருவரும் பாரம்பரிய முறைப்படி பத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் அணிவகுத்து வந்தனர்.
சீர் வரிசைப் பொருள்களை மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து, மண்டபத்திற்குள் எடுத்துச் சென்ற தாய்மாமன்கள் மடியில் வைத்து பிள்ளைகளுக்கு காதுகுத்தப்பட்டது.
பிள்ளைகளின் தாய் வழி தாத்தா மாயழகு கடந்த காலத்தில் மாட்டு வண்டி ஓட்டி விவசாயம் செய்தவர். அந்த வருமானத்தில்தான் அவர் பிள்ளைகளை வளர்த்துப் படிக்கவைத்துள்ளார்.
தங்களது தந்தையின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்த மாட்டு வண்டியின் பெருமையை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும், தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகையிலும் மாட்டு வண்டியில் சீர்கொண்டு வந்து காதணி விழாவை சிறப்பித்ததாக குழந்தைகளின் தாய் மாமன்கள் நெகிழ்வோடு தெரிவித்தனர்.