சென்னை: சாதிப் பாகுபாடு காரணமாக பள்ளி மாணவரும் அவரது தங்கையும் சக மாணவர்களால் தாக்கி, அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் நெல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறார். இவரது மகன் சின்னத்துரை (17 வயது) வள்ளியூர் பகுதியில் 12ஆம் வகுப்பும் 14 வயதான மகள் சந்திரா செல்வி ஒன்பதாம் வகுப்பும் படிக்கின்றனர்.
இரு நாள்களுக்கு முன்னர் இருவரும் வழக்கம்போல் பள்ளி முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இரவு சுமார் பத்து மணியளவில் வீட்டுக்குள் புகுந்த சிலர் திடீரென இருவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினர். இதில் உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் சின்னத்துரையும் சந்திரா செல்வியும் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினர்.
அப்போது வீட்டில் இருந்த இவர்களுடைய தாத்தா கிருஷ்ணன் (59 வயது) பேரக் குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுவதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்தது.
சின்னத்துரையை அவருடன் பயிலும் சில மாணவர்கள் சாதி ரீதியாக விமர்சித்ததாகவும் சாதிப் பாகுபாடு காட்டி அவரை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொடுமை பல நாள்களாக நீடித்து வந்ததை அடுத்து மனமுடைந்து போன சின்னத்துரை பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டார். எனினும் தனது தாயிடம் அவர் நடந்த விவரங்களைக் கூறியதை அடுத்து பள்ளியில் புகார் அளித்துள்ளார் அவரது தாய்.
இதனால் சின்னத்துரையை சாதியை முன்வைத்து துன்புறுத்தியவர்களை பள்ளி நிர்வாகம் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
“இதனால் கடும் ஆவேசமடைந்த மாணவர்கள், சின்னத்துரையை பழிவாங்க முடிவு செய்தனர். அதன்படி சின்னதுரையின் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்கியதுடன், தடுக்க வந்த அவரது தங்கையையும் வெட்டியுள்ளனர். காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,” என்று தமிழக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெஞ்சைப் பதறவைக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு சிறுவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் ஒரு சிறுவன் சரணடைந்தான். ஏழு பேரும் சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.